அலங்காநல்லூரில் போலீஸ் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடரும் மறியல்
அலங்காநல்லூரில் போலீஸ் சமாதானத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
சென்னை: போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தொடர் சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை ஏற்க மறுத்து தொடர் சாலை மறியல் நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்று கோரி அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கான நேரம் முடிந்துவிட்டது என்றும் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் கேட்டுக் கொண்டும் இளைஞர்கள் அங்கிருந்து நகரவில்லை. தொடர்ந்து 21 மணி நேரம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில், போலீசார் போராட்டக்காரர்களை இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. இதனைத் தொடர்ந்து, கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தில் பெரும்பாலான பெண்கள் மற்றும் இளைஞர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, எஸ்.பி. விஜயேந்திர பிதாரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனை மக்கள் ஏற்க தயாராக இல்லை. தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அலங்காநல்லூரில் பதற்றம் நீடித்து வருகிறது.