மருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
மருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை அரசுக்கு சொந்தமான கிராமப்புற மருத்துவமனைகளில் வேலை செய்து வந்த மருத்துவர்களுக்கு, அவர்களின் மேற்படிப்புக்கு உதவும் வகையில் 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தது. அவர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அதிக வாய்ப்பு அளிக்கும் விதமாகவும் இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் இந்தியா முழுக்க நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் இந்திய மருத்துவ கவுன்சில் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இதன்படி தமிழ்நாட்டில் 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரலில், 50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கூறியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் மருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறது.