கண்ணில் மிளகாய்பொடி தூவி கறிக்கடைக்காரர் வெட்டி கொலை.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே பரபரப்பு
காவல்நிலையம் அருகிலேயே கறிக்கடைக்காரர் வெட்டி கொல்லப்பட்டார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் காவல் நிலையம் அருகிலேயே கறிக்கடை ஊழியர் மர்மநபர்களால் அரிவாளால் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குடையாறைப்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். வயது 28. இவருக்கு 2 வருடங்களுக்கு முன்புதான் திருமணமாகி அக்ஷயா என்ற பெண் குழந்தை உள்ளது. குமரேசன் அந்த பகுதியிலுள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். ஆனால் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் சிறைக்கும் சென்று வந்துள்ளார் குமரேசன்.
இன்று காலை அவர் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். ஆர்.வி.நகர் காளியம்மன் கோயில் அருகே குமரேசன் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவரை சிலர் வழிமறித்தனர். திடீரென தாங்கள் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை குமரேசனின் முகத்தில் தூவியது.
மிளகாய்பொடி கண்ணில் பட்டதும் குமரேசன் எரிச்சலில் தவித்தார். அப்போது அந்த கும்பல் தங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாளால் முருகேசனை சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். இதில் குமரேசன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அப்போதும் அந்த நபர்கள் வெறி அடங்காமல் குமரேசனின் பின்மண்டையை பலமாக அரிவாளால் தாக்கியே கொன்றது.
சம்பவம் நடைபெற்ற ஆர்.வி.நகர் காளியம்மன் கோயில் பகுதியானது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி. அது மட்டும் அல்லாமல் சம்பவம் நடைபெற்ற 100 மீட்டர் தூரத்தில்தான் தெற்கு காவல் நிலையமும் உள்ளது. பொதுமக்கள் முன்னிலையிலேயே பட்டப்பகலிலேயே மர்ம கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது அந்த மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து உடனடியாக திண்டுக்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் குமரேசனின் உடலை கைப்பற்றி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். குமரேசன் ஏன் கொல்லப்பட்டார்? ஏதேனும் முன்விரோதமா? கொடுக்கல்-வாங்கல் தகராறா? என்பன பற்றியெல்லாம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.