பாட்டு பாடியது தப்பா.. செருப்பு தைக்கும் தொழிலாளி அடித்து கொலை.. குடிகாரரின் அட்டகாசம்!
பாட்டு பாடியதற்காக கூலி தொழிலாளி அடித்து கொல்லப்பட்டார்.
விழுப்புரம்: பாட்டுப் பாடியதற்காக செருப்பு தைக்கும் தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வேலாநந்தர் கிராமத்தை சேர்ந்தவர் காசிவேலு. முதியவரான இவர் ஊர் ஊராக சென்று செருப்பு மற்றும் ரிப்பேர் ஆன குடைகளை சரி செய்து தருவது வழக்கம். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையிலேயே காசிவேலு வாழ்ந்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் என்ற கிராமத்தில் செருப்பு, மற்றும் குடைகளை ரிப்பேர் செய்ய காசிவேலு சென்றார். அப்போது சாலையில் பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் அதே ஊரை சேர்ந்த அய்யாசாமி 34, என்பவர் எதிரே வந்துள்ளார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
தன்னை பார்த்துதான் காசிவேலு பாட்டு பாடுகிறார் என்று நினைத்து, "என்னை பார்த்து கிண்டலா பாட்டா பாடுறே?" என்று கேட்டார். அதற்கு காசிவேலு, நான் உங்கள பார்த்து ஒண்ணும் பாடலை என்று பதிலளித்தார். "இல்லை... இல்லை... நீ என்னை பாத்துதான் பாடின, ஏன் பாடினே?" என்று அய்யாசாமி கேட்க, இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியது.
பின்னர் அய்யாசாமி ஆத்திரம் அதிகமாகி அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து காசிவேலுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த காசிவேலு அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை பார்த்து பயந்த அய்யாசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து வந்த போலீசார் காசிவேலுவின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வலைவீசி தேடி தப்பியோடிய அய்யாசாமியையும் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.