அரக்கோணம் பணிமனையில் கட்டுமானப்பணிகள் காரணமாக 10 விரைவு ரயில்கள் உட்பட 26 ரயில்கள் ரத்து
அரக்கோணம் பணிமனையில் கட்டுமானப்பணிகள் காரணமாக இன்று 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: அரக்கோணம் பணிமனையில் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதன் காரணமாக அந்த வழியாக பயணிக்கும் 10 விரைவு ரயில்கள் உட்பட 26 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை அருகே உள்ள அரக்கோணம் ரயில்வே பணிமனையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஒரு வாரமாக அந்த வழியாக வரும் ரயில்கள் தாமதமாக பயணித்து வந்தன.
இந்நிலையில், இன்று அந்த மார்க்கமாக பயணிக்கும் 10 விரைவு ரயில்கள் உட்பட 26 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை செண்ட்ரல் - மங்களூர் சதாப்தி விரைவு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் - சென்னை செண்ட்ரல் சேரன் எக்ஸ்பிரஸ், கோவை விரைவு ரயில், சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், சென்னை - ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ், மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், அரக்கோணம் - சென்னை, அரக்கோணம் - சென்னை - செங்கல்பட்டு, அரக்கோணம் - காட்பாடி, அரக்கோணம் - வேலூர், அரக்கோணம் - கடப்பா, சென்னை கடற்கரை - வேலூர், சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ், நெல்லூர் - சூலூர்பேட்டை, திருப்பதி - அரக்கோணம்,ஆவடி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் மிகவும் சிரமமடைந்து உள்ளனர். கோடை விடுமுறையின் காரணமாக, ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரயில்வேயின் இந்த அறிவிப்பால் மாற்று வழிகளில் பயணத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்து வருகின்றனர்.