ரூ. 2950 கோடி கடன் கேட்ட தமிழக அரசு... திட்ட அறிக்கைகளில் சொதப்பல்.. திருப்பியனுப்பிய உலக வங்கி
தமிழக அரசின் 2950 கோடி ரூபாய் கடன் கோரிக்கையை உலக வங்கி நிராகரித்துள்ளது.
சென்னை: தமிழக அரசு ஏரிகளை புனரமைக்க உலக வங்கியிடம் 2950 கோடி ருபாய் கடன் கேட்டு திட்ட அறிக்கையை அனுப்பியது. இதில் 1500க்கும மேற்பட்ட ஏரிகளின் விவரங்கள் முழுமையாக இல்லாததால் தமிழக அரசின் கடன் கோரிக்கை அறிக்கையை தமிழக அரசு திருப்பியனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2015 டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சென்னை, கடலூர் தூத்துக்குடி என பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். விவசாயத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டது.
ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர் வாரப்படாததும் புனரமைக்கப்படாததுமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டிருந்தால் பெரியளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்காது என கூறப்பட்டது.
கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாசன நிலங்களை மேம்படுத்தவும், ஏரிகளை புனரமைத்து விவசாயத்தை பெருக்கவும் நீர்வள திட்டம் 2வது பாகத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
உலக வங்கியிடம் கடன் கோரிக்கை
இதனைத்தொடர்ந்து, ரூ.2,950 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உலக வங்கியிடம் கடன் கேட்டு திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. மத்திய அரசு அனுமதியை பெற்று, பொதுப்பணித் துறை மூலம் புனரமைக்கப்படவுள்ள ஏரிகள் குறித்த விவரங்கள் உலக வங்கிக்கு அனுப்பப்பட்டன.
திருப்பியனுப்பிய உலக வங்கி
இந்நிலையில், தமிழக அரசின் கடன் கோரிக்கையை உலக வங்கி நிராகரித்துள்ளது. கடன் கேட்டு அனுப்பிய திட்ட அறிக்கையையும் உலக வங்கி திருப்பியனுப்பியுள்ளது. இதனால் கடன் கிடைத்துவிடும் என்று காத்திருந்த தமிழக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
அறிக்கையில் சொதப்பல்
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் உலகவங்கி அனுப்பியுள்ளது. அதில், 1,500க்கும் மேற்பட்ட ஏரிகளின் விவரங்கள் முழுமையாக இல்லை எனவும், திட்ட அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. தெளிவான திட்ட அறிக்கையை அனுப்புமாறும் உலக வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
தயார் செய்யும் பணியில் அதிகாரிகள்
இதனையடுத்து, தெளிவான திட்ட அறிக்கையை தயார் செய்து உடனடியாக அனுப்ப அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ட்ட அறிக்கை மீண்டும் தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.