குழந்தைகளுக்கு தாய்பால் கொடுங்க தாய்மார்களே! மெரீனாவில் விழிப்புணர்வு மணற்சிற்பம்
சென்னை: உலக தாய்பால் வாரத்தை போற்றும் வகையில் யுனிசெஃப் மற்றும் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து சென்னை மெரீனா கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆகஸ்ட் மாதம் 1முதல் 7வரை உலக தாய்ப்பால் வாரம். உலகம் முழுவதும் 175 நாடுகள் சர்வதேச தாய்ப்பால் வாரத்தை கடைபிடிக்கின்றன.
தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழாம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துகளும் தாய்பாலில் மட்டுமே உள்ளது என்ற நிலையில், தாய்ப்பால் கொடுக்காததால் நோய் எதிர்ப்புசக்தி குறைவதுடன் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள்.
தமிழகத்தில் சுமார் 18 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாக தாய்ப்பால் வழங்கப்படுவதாக ஒரு கவலையளிக்கும் தகவலை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற தமிழ்நாடு சுகாதாரத்துறையினறால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். குழந்தை பிறந்து முதல் ஒரு மணி நேரம் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படும். அந்த நேரம் பொன்னான நேரம் என்று கூறப்படுகிறது. தாய்ப்பால் தான் பிறந்த குழந்தையின் முதல் உணவு. அந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக முதல் முறை தாய்ப்பால் தொடுக்க வேண்டும். அதன்பிறகு குழந்தை உறங்கிவிடும்.
தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. ஆனால் இளம் தாய்மார்கள் அழகு கெடும் என்று தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்க்கின்றனர். இதனால் ஏராளமான சிசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியின்றி பாதிப்புக்கு ஆளாகின்றன. அதனால் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதையும் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.
தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் சேய் இருவருக்குமே நன்மை பயக்கக்கூடியது என்ற கருத்து தமிழகத்தில் கலாச்சார ரீதியாகவே தொடர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் தாய்பால் கொடுப்பது தாய்க்கும் தன் குழந்தைக்கும் உளவியல் ரீதியான நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகிறது..
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது. இந்நிலையில் அரசு மற்றும் மருத்துவதுறை சார்ந்த உயர் அமைப்புகளின் வலியுறுத்தலுக்காக மட்டுமின்றி, தாய்பால் கொடுப்பது குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக என்பதை தாய்மார்கள் உணரவேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர் சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தாய்ப்பால் உட்கொள்ளும் பிள்ளைகளுக்கு புத்தி கூர்மை அதிகமாக இருப்பதாகவும், மற்ற குழந்தைகளை விட உடற்பருமனால் சிறிதளவே பாதிக்கப்படுகின்றனர் என்றும் சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகின்றன எனவும் நம்பப்படுகிறது.
அதே போன்று தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு பிரிவு 2 இவை கூட அதிக தாக்குதலை ஏற்படுத்துவது இல்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் புற்றுநோய் எலும்பு தேய்மானம் என பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படுவது மிக குறைந்த அளவிலேயே உள்ளதாம்.
இன்றைக்கு பணிபுரியும் மகளிர் பலரும் தாய்பால் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர். தாய்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7வரை கொண்டாடப்படுகிறது. சென்னை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை மணலில் தாய் பால் வாரத்தை சிறப்பிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்தனர் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள். இதில் லயோலா கல்லூரி மாணவர்கள் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களும் பங்கேற்று தாய்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.