அன்பின் நாயகன் ஏசுபிரான் அவதரித்த திருநாள்.. உலகெங்கும் சிறப்பு பிரார்த்தனைகள், கொண்டாட்டங்கள்!
சென்னை: அன்பின் நாயகன் ஏசு பிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித இனத்தின் பாவங்களுக்கு விடியலாக, உலகெங்கும் அன்பு தழைக்க அவதாரமாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பிய திருநாள் இந்த தினம்.
உலகெங்கும் உள்ள மக்கள் மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பொதுவிழாவாக இன்றைக்கு மாறி வருகிறது கிறிஸ்துமஸ்.
உலக நாடுகள் அனைத்திலும் இன்று கிறிஸ்துமஸ் தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இறைமகன் ஏசு பிரான் அவதரித்த புண்ணியத் தலமான பெத்லகேமில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொட்டும் பனியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். ஏசு பிறந்த இடத்துக்குச் சென்று தொழுதனர்.
கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடமான வாடிகனில், போப் ஆண்டவர் தலைமையில் நள்ளிரவுப் பிரார்த்தனை நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் விடிய விடிய பிரார்த்தனைகள் நடத்தினர்.
ஆசிய நாடுகளில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தன.
இந்தியாவில்..
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நள்ளிர திருப்பலிக் கூட்டங்கள் அனைத்து தேவாலயங்களிலும் நடத்தப்பட்டன. கோவா, ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டவர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர் இந்தியர்கள்.
தமிழகத்தில்..
தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழை நாடுகளில் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் அழைக்கப்படும் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம் விளங்குகிறது.
சாந்தோமில்...
சென்னை சாந்தோமில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் நள்ளிரவு திருப்பலி மற்றும் பிராத்தனை நிகழ்ச்சி நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தாமஸ் மலையில்...
இறைமகன் ஏசுவின் சீடர்களுள் ஒருவரான புனித தாமஸ் ரத்தம் சிந்திய மலையான தாமஸ் மலையில் உள்ள தேவாலயத்தில் 24-ம் தேதி தொடங்கி மறு நாள் காலை வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு நடந்த பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இயேசுவின் சீடர் உயிர் நீத்த இடத்தில் கட்டப்பட்ட இரண்டாவது தேவாலயம் என்ற சிறப்பு மிக்கது புனித தாமஸ் மலைத் திருத்தலம்.