சாம்பியன் கார்ல்சனுக்கு ரூ. 9.9 கோடி பரிசு.. வழங்கினார் ஜெ.
சென்னை: உலக செஸ் சாம்பியனாக மகுடம் சூட்டப்பட்டுள்ள மாக்னஸ் கார்சலுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுத் தொகையான ரூ.9.9 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
அதேபோல 2வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு ரூ. 6.03 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.
சென்னையில் இன்று நடந்த பரிசளிப்பு விழாவின்போது கார்சலனுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசை வழங்கிப் பாராட்டினார்.
கடந்த வாரம் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 22 வயதேயான கார்ல்சன், 42 வயதான ஆனந்த்தை அபாரமாக ஆடி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றார். 5 முறை சாம்பியனான ஆனந்த் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவினார்.
கார்ல்சனுக்கு பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. இந்தப் பட்டத்தை இதுவரை அதாவது 2007 முதல் வைத்திருந்தார் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
12 போட்டிகளைக் கொண்ட உலக சாம்பியன்ஷிப் போட்டி 10வது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இதில் ஆனந்த் ஒரு போட்டியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேயைச் சேர்ந்த கார்ல்சன் கடந்த 3 வருடமாகவே செஸ் உலகில் அலை பரப்பி வரும் இளம் வீரர். அபாரமான வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்ல்சன் தற்போது உலக சாம்பியனாகி அப்பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.