உயர் ரத்த அழுத்தம் யாருக்கு வரும்? ஜாதகம் என்ன சொல்லுது?
மே 17ம் தேதியான இன்று உலக உயர் ரத்த அழுத்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது. யாருக்கு உயர் ரத்த நோய் பாதிப்பு வரும் என்பதை ஜாதக ரீதியாக தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: இந்திய இளைஞர்களில், சராசரியாக, 3 பேரில் ஒருவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. மாறிவரும் வாழ்க்கை சூழலே இதற்கு முக்கியமான காரணம் என்றும் பணியில் ஏற்படும் மன அழுத்தம் உயர் ரத்த நோய் ஏற்பட காரணமாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர்.
ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் (Hyper Tension), குறைந்த ரத்த அழுத்தம் (Hypo Tension) என்று இரண்டு வகை உண்டு. ரத்த அழுத்தப் பிரச்னை வந்த பிறகுதான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிட்டால் அதுவே ஆபத்தில் முடியலாம். பொதுவாக, உடல்நலம் தொடர்ந்து பாதிக்க ஆரம்பித்தாலே ரத்த அழுத்தத்தை பரிசோதித்து கொள்ளவேண்டியது முக்கியம்.
நடுத்தர வயது
பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்ததைப் பரிசோதிப்பது அவசியம்! ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை செய்யும் மருத்துவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக, தெரியவந்துள்ளது. எந்த நேரத்திலும் நிதானம் இழக்காதவர்கள், மருத்துவர்கள் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள் பாதிப்பு
இந்திய அளவில் மருத்துவர்களே அதிகளவு உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய அளவில் உள்ள 33 முக்கிய நகரங்களில் பணிபுரியும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்களிடையே இதுதொடர்பாக, ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மன அழுத்தம்
இதன்படி, இந்திய மருத்துவர்களில் சுமார் 56 சதவீதம் பேருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதாக, தெரியவந்துள்ளது. 37 சதவீத மருத்துவர்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பு வருவதற்கான அறிகுறிகளை கொண்டும் உள்ளனர். இரவு, பகல் பார்க்காமல் மருத்துவர்கள் பணிபுரிய நேரிடுவதால், அவர்களுக்கு மன உளைச்சல் அதிகரித்து, அது ரத்த அழுத்த பாதிப்பை கொண்டுவந்து சேர்ப்பதாக, மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன பாதிப்பு
உயர் ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய், ஏன் மரணம் கூட ஏற்படலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம்.
என்ன சாப்பிடலாம்
கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீச்சை, ஆரஞ்சு, முளைகட்டிய தானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல் சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சாப்பிட உயர் ரத்த அழுத்தம் குறையும்.
செவ்வாய் சந்திரன் ரத்த அழுத்தம்
யாருக்கு வரும் ஜோதிடம் சொல்வதென்ன?
• ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும்.
•சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
•ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
•இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
• ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
என்ன பரிகாரம்
•செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப்பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில், முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கலாம்.
• எதையும் தைரியமாக, எளிதாக எதிர்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த பிரச்சினை வராமல் தடுக்கலாம். யோகா, மெடிடேசன் செய்வதன் மூலமும் உயர் ரத்த அழுத்த பிரச்சினையை தடுக்கலாம்.