2019ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு... அரசு தகவல்!
2019 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
தொழில்துறை முதலீடுகள் குறித்து பட்ஜெட்டி உரையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள் : சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் மதுரை, தூத்துக்குடி, நெல்லை மண்டலங்களுக்கு வளர்ச்சி நெறித்திட்டம் உருவாக்கப்படும். ஜெர்மனி அரசின் ஜிஸ் அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் கோவை மண்டலத்திற்கான வளர்ச்சி நெறித்திட்டம் உருவாக்கப்படும்.
உலக அளவிலான முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் விதமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு குறைந்த செலவில் தங்கும் விடுதிகள் கட்டப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 30 கோடி செலவில் குறு நிறுவனங்களுக்கான பன்னடுக்கு பணிமனைகள் கட்டப்படும்.
முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ. 5 கோடியாக உயர்த்தப்படும். அதிகபட்ச மானிய உச்சவரம்பு தற்போதுள்ள ரூ 25 லட்சமே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.