இசை கேட்டால் புவி அசைந்தாடும்.. உலக இசை தினம் இன்று!
உலக இசை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை: உலக இசை தினம்.
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது.
இசை - ஒழுங்குபடுத்தப்பட்ட, அழகுப்படுத்தப்பட்ட ஒலி வடிவம். மனித வாழ்க்கை, பிறந்த நொடியிலிருந்து மண்ணுக்குள் அடங்கும்வரை நெடும்பயணமாகவே தொடர்ந்து வருவது இசை. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை சுவாரஸ்மாக்குவதும், சுவையாக்குவதும் இசையே. தாயின் கர்ப்பத்தில் உருவாகி கொண்டிருக்கும் குழந்தை கூட இசையை ரசிக்க தொடங்கிவிடுகிறது.
மனித உயிர்களை மட்டுமல்ல, ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள ஜீவராசிகள் அனைத்தும் அடங்கிப்போவது இசையை கேட்டால் மட்டுமே. இவை அனைத்தையும் ஒன்றிணைப்பதும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதும் இசையே.
பறவைகள் விலங்குகளின் சத்தங்களே இசையாக வடிவம் பெற துவங்கின. இன்று பல பரிமாணங்களை பெற்று, டிஜிட்டல் வரை வந்துவிட்டாலும் இசையின் ரசனை மனிதர்களுக்கு ஒருபோதும் குறையவும் இல்லை. திகட்டவும் இல்லை. கர்நாடகம், நாட்டுப்புறம், வெஸ்டர்ன், சிம்பொனி, என பல பெயர்கள் சூட்டப்பட்டு புழக்கத்தில் அவை நடமாடினாலும் நம் காதுகளிலும், இதயத்திலும் வந்து தங்கி போவது இசை எனும் ரூபமே. குழந்தைக்கு தாலாட்டு முதல் குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்கள் வரை இசையே முன்னுரையும் முடிவுரையுமாய் தொடர்கிறது.
எண்ணற்ற இசைக்கலைஞர்கள் அபரிமிதமான தங்களுடைய திறமைகளால் கோடானுகோடி மக்களை தங்கள் இசையால் கட்டிப்போட்டுக் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தி இந்த இசை தினத்தை கொண்டாடுவோம். அண்ட சராசரத்தை ஆட்டி படைக்கும் இசையானது உலக உருண்டை சுழலும் வரை பல வடிவங்களில் காற்றில் ஒலித்து கொண்டே இருக்கும்.