நாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது?
கட்டுரையாளர்: சந்திரசேகரன்
சென்னை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2018-19 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. நாம் 6.3%, 7%, 7.7% என்று படிப்படியாக வளர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளோம்.
ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இது வளர்ச்சி தானா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
நிதி பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி, இதற்கு ஆம் என்றுதான் விடை கிடைக்கும். ஆனால் சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி இதற்கான விடை, இல்லை, என்பதுதான்.
இந்தக் கட்டுரையில் இதற்கான காரணங்களை தான் நாம் பார்க்க உள்ளோம்.
மத்திய அரசு, ஜிடிபி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, தேவையான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. ஏனெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்பதை காண்பிப்பதற்கு இந்த புள்ளிவிவரம் தான் அடிப்படை. இதை அடைவதற்காக ஆரம்ப, இடைநிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தாக வேண்டும். அதிலும் இந்தத் துறைகளில் உள்ளீடு தேவையை அவசியத்தை உறுதி செய்ய வேண்டும்.
ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை துறைகளை பொறுத்த அளவில் தண்ணீர் என்பது முக்கியமான உள்ளீடு. இதை அரசு கண்டிப்பாக உறுதி செய்தாக வேண்டும். வருங்காலத்தில் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் தண்ணீர் தேவையை ஈடுகட்ட அரசு ஒரு கணக்கு வைத்துள்ளது (XI Plan Document - Standing Sub-committee of MOWR).
இந்த ஆவணத்தின்படி 2025 ஆம் ஆண்டில் 1093 பிசிஎம் (BCM) என்ற அளவில் இருக்கும். 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 25.6 சதவீதம் அதிகம் தண்ணீர் தேவைப்படும் என்கிறது இந்த கணக்கு. 2050ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளுக்கும் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது 1447 பிசிஎம் என்ற அளவில் இருக்கும்.
2025ம் ஆண்டில் துறைவாரியாக தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பதை எடுத்துப் பார்த்தால், 910 பிசிஎம் அளவுக்கான நீர், நீர்பாசனத்திற்கு தேவைப்படுகிறது. 73 பிஎம்சி உள்நாட்டு உபயோகங்களுக்கு (domestic use) தேவைப்படும். 23 பிசிஎம் தொழிற்சாலைகளுக்கு தேவை. 15 பிசிஎம் தண்ணீர் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும். 72 பிசிஎம் அளவுக்கான தண்ணீர், பிற தேவைகளுக்கு அவசியப்படும்.
2050ம் ஆண்டில், நீர்பாசன பயன்பாடு, உள்நாட்டு பயன்பாடு மற்றும் தொழிற்சாலை பயன்பாடு என்பது முறையே, மேலும், 15.1, சதவீதம், 28.4%, மற்றும் 174 சதவீதம் உயரும் வாய்ப்புள்ளது. 'தண்ணீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974' சட்டம் நம்மிடம் உள்ளபோதிலும், மிக அதிக தண்ணீர் கழிவு என்பது, அருகாமையிலுள்ள, நீர் நிலைகளில்தான் கலக்கிறது. 14 சதவீத ஆற்று பகுதி மிக அதிகமாகவும், 19 சதவீத ஆற்றுப்பகுதி ஓரளவுக்கும் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்கிறது 2002ல் வெளியான ஓர் அறிக்கை.
கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு ரூ.7000 கோடியை செலவிட்டுள்ளது. ஆனாலும் கூட, வெளிப்படையாக எந்த மாற்றத்தையும் நாம் பார்க்க முடியவில்லை. தமிழகத்தில் பாலாறு மற்றும் நொய்யல் ஆறுகள் நீண்டகாலமாகவே, தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்துள்ளன. நதிநீர் அளவால் செலவாகவில்லை, தண்ணீரின் தரத்தால்தான் செலவுபிடிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மிக முக்கியமாக, மாசு அகற்ற செலவிடப்படும் பண மதிப்பை, தற்போதுள்ள ஜிடிபி வளர்ச்சி விகிதத்தில் இருந்து கழித்தல் செய்ய வேண்டும். அப்போதுதான் நிஜமான வளர்ச்சியை கண்டறிய முடியும். நாளை (செப்டம்பர் 30ம் தேதி) உலக ஆறுகள் தினம். ஆறுகளின் தூய்மையை காப்பாற்றுவோம், கூடுதல் செலவீனங்களை தவிர்ப்போம்.