வாஸ்தவம்தான்.. வங்கதேசத்திடம் சிக்கித் திக்கித் திணறிட்டோம்... ஸ்டீவ் ஸ்மித் ஒப்புதல்
பெங்களூரு: வங்கதேசத்துடன் நடந்த போட்டியில் தனது அணி திணறிப் போய் வென்றதை தான் மறைக்க விரும்பவில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். தனது அணி நிறைய முன்னேற வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று பெங்களூரில் நடந்த போட்டியில் வங்கதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா. தோற்கடித்தது என்பதை விட தப்பிப் பிழைத்தது என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்க முடியும்.
காரணம், நேற்று நடந்த போட்டியில் அனைத்து வகையிலும் ஆஸ்திரேலியாவை விட வங்கதேசத்தின் பெர்பார்மன்ஸ் சிறப்பாகவே இருந்தது. இதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தும் ஒப்புக் கொண்டுள்ளார்.
நடுவுல கொஞ்சம் சொதப்பிட்டோம்
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில், மத்திய ஓவர்களில் நாங்கள் சற்று சரியாக ஆடவில்லை. ஏன் என்று தெரியவில்லை. கடைசியில் அது எங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்து விட்டது. இன்னும் சிறப்பாக ஆட நாங்கள் முயற்சிக்க வேண்டும்.
டாப் ஆர்டர் சற்று நிதானித்திருக்கலாம்
டாப் ஆர்டரில் யாராவது ஒருவர் நிலைத்து நின்று ஆடி போட்டியை சிறப்பாக முடிக்க முயற்சித்திருக்க வேண்டும். அதை நாங்கள் செய்யத் தவறி விட்டோம்.
அவிங்க பவுலிங் சூப்பர் பாஸ்
ஆனால் வங்கதேசத்தின் பவுலிங்கை குறை சொல்ல முடியாது. சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக நடு ஓவர்களில் அருமையாக இருந்தது அதுதான் எங்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
டயர்ட் ஆகிட்டோம்
நீண்ட தூரம் பயணித்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதை மட்டுமே காரணமாக கூறி தப்ப விரும்பவில்லை. இந்தியச் சூழலில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் சிறப்பாக விளையாடுவது இயல்பானது.
அந்தப் பிட்ச் மாதிரி இல்லை
ஐபிஎல் போட்டிகளுக்குப் போடுவது போன்ற பிட்ச்சாக இது இல்லை. இந்த சூழலுக்கு எங்களது வீரர்கள் சிறப்பாக அடாப்ட் ஆக வேண்டியது முக்கியம். ஆகி விடுவார்கள் என நம்புகிறேன் என்றார் ஸ்மித்.