எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஈரமுள்ள தமிழர்கள்.. பாரதிராஜா நெகிழ்ச்சி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரமுள்ள தமிழர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
7 பேர் விடுதலைக்காக இன்று நேற்றல்ல, ஜெயலலிதா இருந்தபோதே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மா வழியில் செயல்படும் அரசு இது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஈரமுள்ள தமிழர்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. இருவரும் எளிமையானவர்கள்.
நல்லவேளையாக, 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்துள்ளார்கள். பரிந்துரை மட்டுமல்ல, ஆளுநருக்கு அரசு உரிய அழுத்தம் தர வேண்டும். தவறுகள் என்பது மனித வாழ்க்கையில் சகஜம். 7 பேரும் தவறு செய்தவர்கள். திட்டமிட்ட குற்றவாளிகள் கிடையாது. 27 வருடங்கள் சிறைக்குள் 4 சுவரையே பார்த்து வாழ்ந்துவிட்டனர். வாழ்க்கையின் முக்கால் பகுதியை சுவற்றுக்குள் கழித்துள்ளனர். எந்த ஜீவனுக்கும் சுதந்திர வாழ்க்கையை வாழ உரிமை உண்டு.
உலக தமிழர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவிக்க வேண்டும். கூடிய விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.