கடல் ஆமை 300 வருடம் வாழ காரணமே யோகாதானாம்.. தேவகோட்டை பள்ளியில் கலகல பேச்சு!
தேவக்கோட்டை பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தேவக்கோட்டை: யோகா செய்வதால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்றும், கடல் ஆமை நன்றாக மூச்சை இழுத்து விடுவதால்தான் 300 வருடம் உயிர் வாழ முடிவது சாத்தியம் என்றும் தேவக்கோட்டை சார்பு ஆய்வாளர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் கருப்பையா வரவேற்க, தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவக்கோட்டை நகர் காவல் துறை சார்பு ஆய்வாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
கடல் ஆமை வாழும் ரகசியம்
இவ்விழாவில் தேவகோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் மருது, யோகா தினம் குறித்து மாணவர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, யோகா நமக்கு பல வகையிலும் நன்மையை அளிக்கிறது. உடல், ஆன்மா, மன அழுத்தம் போன்றவற்றுக்கு பல வகையிலும் பயனுள்ளதாக அமைகிறது. நாம் நொடிக்கு பல மூச்சுகளை வெளிவிட்டுக் கொண்டு இருக்கிறோம், ஆனால் கடல் ஆமை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே மூச்சை இழுத்து நிறுத்தி நிதானமாக வெளிவிடுகிறது என்றார்.
ஆயுளை கூட்டும் யோகா
அதனால்தான் 300 ஆண்டுகள் கடல் ஆமையால் உயிர் வாழவும் முடிவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளிவிட்டால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்று தெரிவித்த மருது, மனிதனின் ஆயுட்காலம் கூடுவது யோகா செய்வதனால்தான் முடியும் என்று அறிவுறுத்தினார்.
அரசுபள்ளிதான் சிறந்தது
தொடர்ந்து பேசிய மருது மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது; எந்த ஒரு வேலைக்கும் லஞ்சம் வாங்காமல் இருந்தால் யாருக்கும், எந்த இடத்திலும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லலாம். எனவே இந்த நாளில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்து கொள்வோம். அரசு பள்ளியில் படிப்பதை தாங்கள் யாரும் தாழ்வாக என்ன வேண்டாம். நான் இந்த பதவிக்கு வரகாரணமே அரசு பள்ளியில் படித்ததாலதான். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அரசு பள்ளியில் படித்துதான் உலகமே போற்றக்கூடிய வகையில் உயர்ந்தார்,
நல்லதை செய்ய உறுதியேற்போம்
சிறு வயதிலேயே நல்லது எது, கேட்டது எது? என ஆசிரியர் சொல்வதை கேட்டு, தெரிந்து கொண்டு செயல்பட்டால் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வரமுடியும். நல்லதை மட்டுமே செய்வோம் என்றும் கெட்டதை செய்ய வேண்டாம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மருது விழாவில் பேசினார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு, மாணவர்கள் அசத்திய யோகா நிகழ்வினை கண்டுகளித்தனர்.