வடியாத வெள்ளம்- வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை அவலம் - ஒரு எழுத்தாளரின் இன்னொரு 'டிராஜெடி'!
சென்னை: சென்னை நகரில் 2 நாட்களுக்கு முன்னர் கொட்டித் தீர்த்த மழையால் விடிய விடிய வாகன நெரிசலில் சிக்கிய பேரவலத்தை எழுத்தாளர் விநாயக முருகன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளமும் வெளியிட்டிருந்தது.
தற்போது வெள்ளத்தில் சிக்கி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான சென்னைவாசிகளில் ஒருவராக தமது நிலைமையை பற்றி எழுத்தாளர் விநாயக முருகன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
விநாயக முருகனின் ஃபேஸ்புக் பதிவு:
என் வீட்டை சுற்றி குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. எங்கள் தெருவில் இருக்கும் வீடுகள், வாகனங்கள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளன. முதல் படத்தில் இருப்பது கடந்தவாரம் எடுத்த புகைப்படம். இரண்டாவது, மூன்றாவது படங்கள் நேற்று முன்தின மழைக்கு பிறகு எடுத்தவை. தற்பொழுது என்னால் நீரில் நின்று எடுக்க முடியவில்லை. இடுப்பளவு சாக்கடை நீராக உள்ளது. மழை நீரில் சாக்கடை நீர் கலந்துவிட்டது. வெள்ள நீரை அகற்ற சொல்லி வளசரவாக்கம் மாநகராட்சியிடம் பலமுறை சொல்லி விட்டோம்.
எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் தெருவில்தான் இவ்வளவு பிரச்சினை. பின்னால் இருக்கும் வீட்டின் மதில்சுவரை தாண்டி அந்தப்பக்க தெருவில் நுழைந்தால் நீர் இல்லை. ஒரு படத்தில் பெண் வேடமிட்ட நடிகர் கமலஹாசன் வீட்டின் மாடிக்குழாய் வழியாக ஏறி குளியலறை சென்று மீண்டும் வீட்டினுள் செல்வார். நாங்கள் பின்வீட்டின் மதில் சுவர் மீது ஏறி சந்து வழியாக அந்தப்பக்க தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு செல்கிறோம். இதற்காக இரண்டு நாற்காலிகளை தற்காலிகமாக மதில்சுவருக்கு இரண்டு பக்கமும் இரண்டு புறமும் வைத்துள்ளோம்.
நாங்கள் மதில் ஏறி குதிக்கும் இடத்தில் ஒரு கிணறு உள்ளது. ஒருமுறை கால் தவறி அதில் விழ பார்த்தேன். பிறகு எதற்கு ரிஸ்க் என்று அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து வீட்டிலேயே தங்கிவிட்டேன். இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அடுத்த மாதம் வலம் என்ற எனது முக்கியமான நாவலொன்று வெளிவருகிறது. அந்த வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள முடியுமா என்று கூட பயமாக உள்ளது. விழாவுக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நம்பிக்கையில் வீட்டில் அடைந்து கிடக்கிறேன்.
எனக்கு இருதய பலகீன நோய் உள்ளதால் தயவு செய்து இலங்கை பிரச்சினையில் மக்கள் இறக்கவில்லையா? இதெல்லாம் ஒரு கஷ்டமா என்றோ அரசையே குறை சொல்லாதீங்க. நீங்களே இறங்கி சுத்தம் செய்யுங்கோ என்றோ சொல்லாதீர்கள்.
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ரோஸரி கார்டன் அகாடமி என்ற மழலையர் பள்ளிக்கூடமொன்று உள்ளது. அதற்கு பின்னால் இன்னொரு அரசுப்பள்ளி உள்ளது. இந்த மாதம் முழுக்க அந்த பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுள்ளார்கள். சீமான் வீடு இருக்கும் சாய்ராம் அவென்யூ இரண்டாவது தெருவில்தான் இவ்வளவு களேபரங்களும் நடக்கின்றன. சற்றுமுன்புதான் சீமான் வீட்டு நீரை அகற்ற ஆரம்பித்துள்ளார்கள். தெளிவாக முகவரியை சொல்லிவிட்டேன்.
மாநகராட்சிக்கு பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஒரு அலைபேசி எண்ணை தொடர்புகொள்ள சொன்னார்கள். தெருவில் வசிக்கும் நாங்கள் எல்லாரும் எங்கள் ஒவ்வொரு அலைபேசி எண்ணிலிருந்து அழைத்தோம். இப்போது அந்த அலைபேசி எண்ணை நிரந்தரமாக அணைத்துவிட்டார்கள். ஆட்டோவில் வந்தால் ஆட்டோ ஓட்டுநர் தெருமுனையிலேயே நிறுத்திவிடுகிறார். மாநகராட்சிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதிகள் எப்படி என்று தெரியவில்லை.
தயவு செய்து இந்த பதிவை படித்துவிட்டு மனம் இளகி என்னை சந்திக்க முடிவு செய்து யாராவது வந்தால் அப்படி வரமாட்டீர்கள் என்று தெரியும் ஒருவேளை வந்தால் தயவுசெய்து முன்பக்க தெரு வழியாக இடுப்பளவு நீரில் சிரமப்பட்டு நீந்தி வரவேண்டாம். பின்பக்க தெருவில் இருக்கும் வீட்டில் நுழைந்து வந்தால் கொல்லைப்புறத்தில் கிணற்றடியில் ஒரு ஸ்டூல் இருக்கும். அதன் மீது காலை வைத்து ஏறினால் எங்கள் வீட்டின் மதில்சுவர். கால்வைக்கும் இடத்தில் பின்பக்க வீட்டில் பழமையான கிணறொன்று உள்ளது. மதில் சுவர் மழையில் விரிசலடைந்து பாசிபடர்ந்துள்ளது. கவனமாக மதில் மீது கால்வைத்து ஏறி வரவும்.
மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்சினை. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. சிலர் நாட்டை விட்டு வெளியேறலாமா என்று தீவிரமாக பரிசீலனை செய்துவருகிறார்கள்.
நாட்டை விட்டு போகவேண்டும் என்றால் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். என்னால் அது கூட முடியாது.
இவ்வாறு விநாயக முருகன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.