பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ‘பறை முழக்கப் போராட்டம்’
சென்னை: தென்சென்னை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களின் பறைமுழுக்கப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் பின்வரும் காரணங்களுக்காக நடைபெற்றது.
அரசு விழிப்புணர்வுத் திட்டங்களின் பிரச்சாரத்திற்கு இசை மற்றும் நாடகப் பிரிவு, தென்னக பண்பாட்டு மையம், இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையில் பதிவு செய்த அனைத்து கலைக்குழுக்கள் மற்றும் கலைஞர்களுக்கு அரசியல் பாகுபாடின்றி பொதுத்தன்மையோடு வாய்ப்புகள் வழங்கிட வேண்டும்.
அரசின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கலைக்குழுக்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கலை நிகழ்வுகளுக்கென்று ஒதுக்கப்படும் நிதியை வேறு திசைக்கு மாற்றக் கூடாது.
மத்திய அரசின் இசை மற்றும் நாடகப் பிரிவால் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கென்று தேர்வு செய்யப்பட்ட 41 கலைக்குழுக்களையும் முறையாக பயன்படுத்த வேண்டும்.
இறந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பத்திற்கு சேரவேண்டிய உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டாவை உடனே வழங்க வேண்டும்.