தாலிக்குத் தங்கம் கொடுப்பதாக கூட்டம் சேர்த்த அதிமுகவினர்... ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பெண்கள்!
நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தாலிக்கு தங்கம் அளிப்பதாக கூட்டத்தை சேர்த்து விட்டு பின்னர் எந்த நலத்திட்டங்களும் கிடைக்காததால் பெண்கள் ஏமாற்றமடைந்தனர்..
நெல்லை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தாலிக்கு தங்கம் வழங்குகிறார்கள் என்று கூட்டத்தை சேர்த்து பிறகு அதை கொடுக்காததால் பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.
நெல்லையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. வழக்கம் போல் அரசு உதவி பெறும் வகையில் மக்களை அழைத்து வந்து மைதானத்தை நிரப்பினர்.
மேடையில் நேரமின்மை காரணமாக சிலருக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்ததால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
இவர்களில் பலர் வாகனத்தில் முறையாக அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் பெரும்பாலானோருக்கு பஸ் வசதி குறித்து தெரியவில்லை. இதனால் அவர்கள் இரவு 7 மணிக்கே கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்களை கட்டுபடுத்த முடியாமல் அலுவலக ஊழியர்கள் திணறினர். இவர்களில் நலத்திட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டனர். மற்றவர்களை கலைந்து செல்லுமாறு அதிகாரிகள் கூறியும் பெண்கள் கூட்டம் முண்டியடித்ததால் உள்ளே இருந்த அலுவலர்கள் வேலை நேரம் முடிந்தும் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
தாலிக்கு தங்கம் வாங்க வந்தவர்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனாலும் அந்தந்த வட்டார அலுவலர் நிலையில் தனி தனியாக நிறுத்தி வழங்காமல் குத்துமதிப்பாக வழங்கப்பட்டதால் தள்ளுமுள்ளுவை சமாளிக்க முடியவில்லை. இதனால் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் ஓழுங்குப்படுத்தப்பட்டது.