தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி - நெல்லையப்பர் கோவிலில் நவீன ஸ்கேனர் பொருத்தம்
நெல்லை: தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நவீன ஸ்கேனர் பொருத்தப்பட்டது. கோவிலுக்கு பக்தர்களின் உடமைகள் பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தென் தமிழகத்தில் பிரசித்த பெற்ற சிவன் கோயில்களில் நெல்லையப்பர் கோவிலும் ஓன்றாகும். இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்ளூர் பக்தர்களும், வெளியூர் பக்தர்களும வந்து நெல்லையப்பரை தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கோயிலில் எப்போதும் கூட்டம் காணப்படும்.
நெல்லையப்பர் கோயிலுக்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியில் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்ய பிறகுதான் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அம்மன், சுவாமி சன்னதி, வெளி பிரகாரங்கள், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சங்கிலி மண்டபம், அன்னதான கூடம், சுவாமி தேர், சிலை பாதுகாப்பு ஆகிய 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகள் தினமும் செயல் அலுவலர் அறையில் உள்ள சிசிடிவி மூலம் தினமும் கண்காணிக்கப்படும்.
தாமிர சபை
சிவபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில் தாமிரசபையான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
ஆருத்ரா தரிசனம்
4ம் திருவிழாவான 20ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷிப வானகத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வந்தார். 25ம் தேதி தாமிர சபையில் உள்ள நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடக்கிறது. 26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனையும், தாமிர சபையில் காலை 4.50 மணிமுதல் 5.20 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறும். வருகிற 26ம் தேதி வரை 2ம் பிரகாரத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெண்பாவை வழிபாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்டம்
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், இந்த நிலையில் அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள பெரிய கோயில்களில் செல்போன், பைகள், பெரிய தேங்காய் கூடை ஆகியவற்றை பக்தர்கள் எடுத்து செல்வதால் அவற்றையும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அடிப்படையில் நெல்லையப்பர் கோவிலில் ரூ.20 லட்சம் செலவில் நவீன ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்கேன் பரிசோதனை
நடை திறக்கும் நேரமான காலை 5.45 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் நவீன ஸ்கேனர் மூலம் பரிசோதனை செயயப்பட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அனைத்து பக்தர்களின் உடைமைகளையும் உடனடியாக சோதனையிட முடியும். இந்த பரிசோதனை முறைக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.