சுவாதி படுகொலை.. ஒய்.ஜி.மகேந்திரனின் பேஸ்புக் "பகிர்வால்" கிளம்பிய பரபரப்பு.. மன்னிப்பு கேட்டார்!
சென்னை: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் பேஸ்புக் பக்கததில் போடப்பட்டதாக ஒரு பதிவு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆனால் அந்தப் பதிவு தற்போது ஒய்.ஜி.மகேந்திரனின் பெயரில் உள்ள பக்கத்தில் காணவில்லை. மாறாக ஒய்.ஜி. மகேந்திரன் அளித்துள்ள விளக்கங்கள்தான் இடம் பெற்றுள்ளன. மேலும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யப்பட்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்தக் கொலை அகில இந்திய அளவில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை ஒரே ஒருவன்தான் வெட்டி கொலை செய்துள்ளான். ஆனால் அவனைப் பிடிக்கக் கூட முயலாமல் அங்கிருந்தோர் சமைந்து போன செயல்தான் பலரையும் விரக்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் இப்பிரச்சினையில் தற்போது ஜாதி - மதம் புக ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாக இந்தப் பிரச்சினை குறித்து எழுதி புயலைக் கிளப்பி வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதில்,
"ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை. இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான். ஊடங்கங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும். தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள். திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காம ரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள். என்ன செய்வது இறந்தது பிராமண பெண். இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது. செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும் ??? இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ ???" என்று எழுதப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறின.
இருப்பினும் ஒய்.ஜி.மகேந்திரனின் பேஸ்புக் பக்கத்தில் அந்தப் பதிவு இல்லை. ஆனால் அதற்குப் பதில் தற்போது சில பதிவுகளை ஒய்.ஜி.மகேந்திரன் ஆங்கிலத்தில் போட்டுள்ளார்.
முதல் பதிவு: பேஸ்புக்குக்கோ அல்லது வேறு யாருக்குமோ எனது பக்கத்தில் உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்தவோ, போஸ்ட் போடவோ அனுமதி கொடுக்கவில்லை. இதை மீறி யாராவது எனது பேஸ்புக் பக்கத்தில் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக்குக்குக நான் அனுமதி அளிக்கிறேன் என்ற அறிவிப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன்.
2வது பதிவு: அடுத்து அவர் போட்டுள்ள ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் இது - என்னை தெளிவுபடுத்த அனுமதியுங்கள். ஸ்வாதி படுகொலை தொடர்பாக தமிழில் வெளியான ஒரு கருத்து என்னிடம் வந்தது. அந்த நேரத்தில் யாரும் அதைப் பற்றிப் பேசாமல் இருந்ததால் அதை நான் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு, தற்போதுதான் அந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்தப் பதிவை நான் உருவாக்கவில்லை. (என்னிடம் தமிழ் ஃபான்ட் கூட இல்லை). அந்தப் பதிவின் சாராம்சம் அந்த சமயம் எனக்கு உடன்பாடானதாக இருந்தது. அந்தப் பதிவை நான் உருவாக்கியிருந்தால் அதை நான் மறைத்திருக்க மாட்டேன். நிச்சயம் ஆமாம் நான்தான் எழுதினேன் என்று கூறியிருப்பேன். இதற்கு முன்பு பலமுறை நான் அப்படி நடந்து கொண்டுள்ளேன். நான் சொல்வதை நம்புவதும், நம்பாததும் படிப்பவரின் விருப்பம். ஆனால் இதுதான் உண்மை. (LET ME CLEAR THE AIR ..THE POST ABOUT TRAGIC MURDER OF SWATHI IN TAMIL CAME TO ME AND I SHARED IT WITH ALL BECAUSE I FELT AT THAT POINT THAT ENOUGH FUSS WAS NOT BEING MADE ABOUT IT AS IN OTHER SIMILAR CASES. ..ONLY NOW THE PROTESTS HAVE PICKED UP.... THIS POST WAS NOT CREATED BY ME.(I DONT EVEN HAVE TAMIL FONT) I ONLY AGREED WITH ITS CONTENT ON THAT ONE POINT. IF I HAD ORIGINATED IT I WD HAVE HAD THE GUTS TO STAND BY IT. I HAVE DONE SO BOLDLY ON PREV OCCASION BELIEVING THIS OR NOT IS THE READER'S CHOICE. BUT THIS IS THE FACT)
3வது பதிவு: அடுத்து ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நான் மீண்டும் சொல்கிறேன். என்னிடம் வந்ததைத்தான் நான் பகிர்ந்தேன். அவ்வளவுதான். அந்த சமயத்தில் அந்த விஷயம் அதிக அளவில் கவனிக்கப்படாமல் இருந்ததால் அதை நான் பகிர்ந்தேன். எனது உணர்வுகள் அனைத்தும் கொல்லப்பட்டவர் மீதுதான் இருந்தது. கொலையாளி குறித்து நான் கவலைப்படவில்லை. அந்தப் பெயர் அந்தப் பதிவில் ஏற்கனவே இருந்தது. அதை நான் அவசரப்பட்டுக் கூட பகிர்ந்திருக்கலாம். அதனால் உங்களில் பலர் மனம் புண்பட்டிருக்கலாம். ஆனால் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. யாரையும் நான் புண்படுத்தியதும் இல்லை. நாளை உண்மை வெளி வரும். என்ன சாதியாக இருந்தாலும் சரி, மதமாக இருந்தாலும் சரி, கொலை செய்தவன் நிச்சயம் கண்டிக்கப்படுவான். நான் மதவாதியல்ல. இன்னும் எனது பகிர்வால் யாரேனும் புண்பட்டிருந்தால், அதைப் பகிர்ந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இப்போதும் சொல்கிறேன், அதை உருவாக்கியவன் நான் அல்ல. (Once again before everyone gets over emotional I REPEAT I FORWARDED WHAT CAME TO ME THATS ALL..AT THAT POINT I THOUGHT THIS SHD BE GIVEN MORE COVERAGE. MY FEELING WAS FOR THE DEAD PERSON NOT AT ALL ABOUT THE KILLER. THAT NAME WAS ALREADY THERE IN THE POST. WAS I HASTY TO SHARE IT..YES MAYBE...BECAUSE A LOT OF U HAVE BEEN HURT. BUT THAT WAS NOT MY INTENTION. NEVER TO HURT ANYONE. TOMORROW IF THE TRUTH COMES OUT..WHATEVER BE THE CASTE OF THE KILLER HE WILL BE CONDEMNED. I AM NOT A communal person. If STILL PEOPLE ARE UPSET I APOLOGISE..FOR SHARING IT. BUT THAT POST WAS NOT MY CREATION)
ஒய்.ஜி.மகேந்திரன் அளித்துள்ள விளக்கத்தின் மூலம் நமக்குப் புரிவது என்னவென்றால்... சுவாதி படுகொலை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் சுற்றி வரும் ஒரு பதிவு அவருக்கும் வந்துள்ளது. அதை அவர் அப்படியே எடுத்து ஷேர் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பவே அதை நீக்கி விட்டு விளக்கம் அளித்துள்ளார்.