எதிரிகளை அழிக்க ராஜபக்சே வீட்டில் யாகம் நடத்தினார்களா திருச்செந்தூர் திரிசுதந்திரர்கள்?
தூத்துக்குடி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வீட்டிற்குச் சென்று திருச்செந்தூர் திரிசுதந்தரர்கள் யாகம் நடத்திவிட்டு வந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரை பற்றவைத்து பரபரப்பாக்கியுள்ளவர் பா.ம.கவின் மாநில கொள்கை விளக்க அணித் தலைவரான அ.வியனரசு.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஒன்றுவிட்ட தங்கையின் கணவரான திருகுமரநடேசனின் மணிவிழாவில் பங்கேற்க 30 பேர் கொண்ட 'திரிசுதந்திரர்' குழு அங்கே சென்றதாகவும், திருச்செந்தூர் கோயிலின் தக்காராக இருக்கும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த கோட்டை மணிகண்டனின் தம்பி ராமரும் அந்தக் குழுவில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒன்பது நாட்கள் கழித்துதான் அவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள் என்கிறார் வியனரசு.
பூஜைகள், யாகங்கள்
இலங்கை சென்று திருகுமர நடேசனின் மணிவிழாவில் கலந்துகொண்டவர்கள், அதன் பிறகு பல தொழிலதிபர்கள், வி.ஐ.பி வீடுகளுக்குச் சென்று பூஜைகள் செய்திருக்கிறார்கள்.
எதிரிகள் அழிய யாகம்
இலங்கை அதிபர் ராஜபக்சே வீட்டுக்கும் போய், 'சத்ரு சம்ஹார த்ரிசதீ ஜபம், குமார ஸ¨க்த ஜபம்' என்கிற பெயரில் இரண்டு யாகங்கள் நடத்தினார்களாம். இவை எதிரிகளை அழிப்பதற்கும், எதிரிகளை நண்பர்கள் ஆக்குவதற்குமாம். தமிழர்களின் எதிரியான ராஜபக்சேவுக்கு ஆதரவாக 'ராஜபக்ஷேவின் எதிரிகள் அழிய வேண்டும்' என யாகம் நடத்தவேண்டும் என்று கேட்கிறார் வியனரசு.
அரசு வாகனத்தில் பயணம்
இலங்கையில் தொழிலதிபர்கள் வீட்டிற்கு யாகம் நடத்தப்போனவர்கள், 6 நாட்கள் இலங்கை முழுவதும் அரசு வாகனத்தில் சுற்றியுள்ளனர். மதுரையில் இருந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு சொந்தமான சிசில் ஏர்லங்கா விமானத்தில் போயுள்ளனர்.
ரூ.10000 காணிக்கை
ராஜபக்சே வீட்டில் யாகம் நடத்திய திரிசுதந்திரர்களுக்கு ஆளுக்கு 10000 ஆயிரம் ரூபாய் காணிக்கை கொடுத்துள்ளார். தனது கையால் தேநீர் கொடுத்துள்ளார் ராஜபக்சே, அப்போது திரிசுதந்திரர்கள், அதிபர் தேநீர் ஆகம முறைப்படி தேநீர் கொடுக்க கூடாது ஆகம விதிமுறைக்கு முரணானது என்று கூறியுள்ளனர் இதெல்லாம் ஆதரப்பூர்வமான உண்மை என்று கூறியுள்ளார். பக்தர்கள் போர்வையில் இலங்கை உளவாளிகள் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
டிஐஜியிடம் மனு
தமிழக அரசு தீர விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நெல்லையில் டிஐஜியிடம் வரும் வெள்ளிக்கிழமை மனு கொடுக்கப் போவதாகவும் வியனரசு கூறியுள்ளார்.
இலங்கை போனது உண்மைதான்
இந்த புகாரை திரிசுதந்திரர்கள் தரப்பினர் மறுக்கின்றனர். கடந்த 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இலங்கைக்குப் போய்விட்டு வந்தது உண்மைதான். 16 பேர் மட்டும்தான் போனோம்.
ராஜபக்சே வீட்டில் யாகமா?
வருடந்தோறும் இதுபோன்று வெளிநாடுகளுக்குப் போய் சிலர் வீட்டில் யாகம், பூஜை செய்வது வழக்கம். இப்போதும் அப்படித்தான் இலங்கைக்குப் போனோம். அங்குள்ள முக்கிய தொழிலதிபர்கள் வீட்டுக்குப் போய் யாகம் செய்தோம். ராஜபக்சேவின் வீட்டுக்கோ, அவருடைய உறவினரான திருகுமர நடேசன் வீட்டுக்கோ போகவில்லை என்கின்றனர்.
திமுகவினர் கிளப்புறாங்க
திரிசுதந்திரர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தி.மு.க-வைச் சேர்ந்த மணல்மேடு சுரேஷ் போன்றவர்கள், வேண்டும் என்றே கிளப்பும் புகார்'' என்கிறார் கோயில் தக்காரான கோட்டை மணிகண்டன்.
திருச்செந்தூர் முருகனுக்கே வெளிச்சம்
இலங்கை போனது உண்மை என்று திரிசுதந்திரர்கள் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் ராஜபக்சே வீட்டிற்குப் போய் யாகம் நடத்தவில்லை என்று மறுக்கின்றனர். இதில் யார் சொல்வது உண்மை எல்லாம் அந்த திருச்செந்தூர் முருகனுக்கே வெளிச்சம்.