We miss you Tamilisai: "அப்பா என்கூட பேசலையே".. ஏங்கி தவித்த தமிழிசை.. அவரில்லாமல் தவிக்கும் தமிழகம்
சென்னை: "அப்பா என்கூட பேசலையே" என்று ஒரு குழந்தைபோல அன்று ஏங்கி தவித்த தமிழிசைதான்.. இன்று வலிமை மிகுந்த பொறுப்பை மிக திறமையாக செயல்படுத்தி வருகிறார்.. ஆனால், தமிழிசை இல்லாத ஆண்டாக 2019ஐ முடிக்கிறது தமிழகம்.. உண்மையிலேயே தமிழிசையை ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் தமிழர்கள்!!
ஒருமுறை ஸ்கூலில், "நீ பெரியவளானதும் என்னவாக போறே?" என்று ஒரு டீச்சர் கேட்டதும், கண்ணை மூடிக்கொண்டு படக்கென்று "எம்எல்ஏ" என்று சொன்னார் தமிழிசை. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் இதை சொன்னதும், மகளை கடிந்து கொண்டார் அவர்.
"ஏன் இப்படி சொல்றே.. அப்படியெல்லாம் சொல்லாதே.. யாராவது பெரியவள் ஆனதும் என்னவா ஆகப்போறேன்னு கேட்டால், டாக்டர் ஆக போறேன்னு சொல்லணும்" என்று வற்புறுத்தியவர் இவர் தாய். இவரது ஆசைப்படியே மருத்துவர் ஆகிவிட்டாலும், தன் ஆசைப்படியே அரசியலுக்குள்ளும் நுழைந்தார் தமிழிசை.
இளம் வயதில், தந்தையின் பேச்சால் எவ்வளவு மயங்கி விழுந்தாரோ, அதே அளவுக்கு ஈர்ப்பு வாஜ்பாய் பக்கமும் தன்னையும் அறியாமல் தமிழிசைக்கு ஏற்பட்டது. பாஜகவின் உறுப்பினர் ஆனார்.. "அதிகபிரசிங்கத்தனம் எதற்கு" என்று தந்தையின் கோபத்துக்கு 6 மாச காலம் ஆளானதையும், அப்பா பேசலையே என்று மனம் நொந்தும் போய்விட்டார்!
பாப்பா
1996-ல் "பாப்பாவை அரசியலுக்கு கூட்டிட்டு வந்துடுங்கன்னு" மூத்த தலைவர் யசோதா, குமரி அனந்தனிடம் சொல்லவும் கொதித்துபோன குமரி அனந்தன், "நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது, எனக்கு வாரிசு அரசியல் பிடிக்காது, அதனால என் பொண்ணை வாரிசாக கொண்டு வர மாட்டேன்" என்று திடமாக சொல்லியும் விதி வேறு விதமாக சென்றது!
சந்தேகம்
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த மகளை எல்லோரும் சந்தேகிக்கவே செய்தனர். எந்த ஒரு நடவடிக்கையிலும் ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகக் கண்களுக்கும், சர்ச்சை பேச்சுக்களுக்கும் தமிழிசை அப்போது ஆளாகினார். ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி.. விமர்சனங்களை தாங்கி கொள்ள பழக்கப்படுத்தியது அன்றே கண்ணியத்துடன் தமிழிசையை குமரியார் வளர்த்தவிதம்தான்!
உண்மை
ஒரு மாவட்ட தலைவர் என்ன சொன்னாலும் சரி, அந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார் அன்றே புகழ்பெற்ற டாக்டராக உயர்ந்திருந்த தமிழிசை. இதை தந்தை குமரியாரும் பலமுறை கவனித்து மனதுக்குள் வருத்தப்படவும் செய்திருக்கிறார். கட்சிக்கு தான் உண்மையானவர்தான்.. விசுவாசமானவர்தான்.. என்பதை மேலிடம் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் 15 வருடங்கள் ஆயிற்றோ என்னவோ.. அதன்பிறகுதான் மாநில தலைவர் ஆனார் தமிழிசை.
ஆர்எஸ்எஸ்
தமிழிசை பொறுப்பேற்ற நேரம், தமிழக பாஜக அதல பாதாளத்தில் தொங்கி துவண்டு போய்க் கிடந்தது. ஆர்எஸ்எஸ் என்ற பிடிக்குள் சிக்கி கொள்ளாமல், தன்னையும் தற்காத்து, கண்ணியத்தையும் இழக்காமல், கட்சிக்கும் பங்கம் வராமல் சரியான நேர்க்கோட்டு விகிதத்தில் பயணிக்க தமிழிசையால் மட்டுமே முடிந்தது. தமிழகத்தில் மக்கி கிடந்த பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது தமிழிசைதான்.. பாஜகவின் மக்கள் விரோத போக்கு அறிவிப்புகளுக்கு எல்லாம் கல்லடி பட்டு காயம் ஆனதும் தமிழிசைதான். தலைமையின் எந்த கண்டிப்பு சொல்லுக்கும் ஆளாகாமல் தன்னை பார்த்து கொண்டவர் தமிழிசை.
கருணாநிதி
குமரியார் மகளிடம் நாகரீக பேச்சு எப்போதுமே இருக்கும் என்று கருணாநிதியே உயர்த்தி சொல்லும் அளவுக்கு தன்னை பக்குவப்படுத்தி கொண்டவர். அது மட்டுமல்ல.. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை, கனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று படித்தவர்தான் தமிழிசை. கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை எப்படி கருவிலே சரி செய்வது என்ற படிப்பினைதான் இவர் தேர்ந்தெடுத்து படித்தார்.
5 ரூபாய் சீப்பு
மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராகவும் வேலை பார்த்தவர். ஆனால், இந்த திறமையை அறியாமல், தமிழிசையின் தலைமுடி, அவரது உருவத்தை வைத்து சோஷியல் மீடியாவில் பலர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.. "அந்த அம்மாவுக்கு யாராவது 5 ரூபாய்க்கு சீப்பு இருந்தால் வாங்கி தாங்கப்பா.." என்று ஒரு நடிகரும், பேச்சாளருமான ஒருவர் கேலியும் செய்யும் அளவுக்கு ஆளானார்.
கேலி கிண்டல்
நெட்டிசன்கள், ட்விட்டர்வாசிகள், எத்தனை மீம்ஸ்களை போட்டு கலாய்த்தாலும், இதற்கும் தமிழிசையே பலமுறை சளைக்காமல் பதில் அளித்தார்..."என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள். நான் அவர்களைக் கண்டு அச்சப்படுவதற்குப் பதிலாக, சிரித்துக் கொள்கிறேன். பலர் எனது செல்பேசிக்கு அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதுண்டு. இதே மாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வார்களா அவர்கள்?" என்று பொளேர் எனக் கேட்டார்.
தனிப்பட்ட தாக்குதல்
ஒருவரின் உருவத்தை விமர்சிப்பது நாகரீகம் அல்லதான்... அப்படி விமர்சிப்பது தவறும்கூட... ஆனால் ஒரு பெண் என்றும் பாராமல், மருத்துவர் என்றும் பாராமல், குடும்ப பிண்ணனியையும் யோசிக்காமல், கட்சியின் மாநில தலைவி என்ற பொறுப்பையும் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட தாக்குதலை தமிழிசை மீது தொடுக்க, அவர் சார்ந்துள்ள கட்சியும், அதற்கு வக்காலத்து வாங்கும் போக்கும்தானே தவிர, தமிழிசை மீதான தனிப்பட்ட கோப, தாபங்கள் இல்லை என்பதே உண்மை! எந்த அளவுக்கு தமிழிசையை கிண்டல் செய்தார்களே, அதே அளவுக்கு தமிழிசைக்கு உயர்பதவி என்றதும் அதே மீம்ஸ்களை போட்டு தூக்கி உயர வைத்ததும் இதே நெட்டிசன்கள்தான்!
பாஜக
தாமரை மலர்ந்ததோ இல்லையோ.. அல்லது மலர போகிறதோ இல்லையோ.. "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற இந்த வாசகத்தை தமிழகம் முழுக்க பரப்பியது தமிழிசைதான்.. பாஜக என்றால் தமிழிசை, தமிழிசை என்றால் பாஜக என்ற அளவுக்கு தமிழக மக்கள் பாவித்து வந்தனர்.. மலராத ஒரு தாமரையை கிட்டத்தட்ட மலர வைத்துவிட்டது போல ஒரு பிரமையை ஏற்படுத்தியது தமிழிசைதான்!
வெறுமை
ஆனால்.. இன்று தமிழிசை இல்லாத தமிழகம் வெறுமையாக உள்ளது.. மீம்ஸ்களை போட்டு தனிநபர் தாக்குதல் தொடுத்த நெட்டிசன்கள் இன்று நிர்மூலமாகி உள்ளனர்.. மாநில பாஜகவில் இன்னமும்கூட ஒரு தலைமையை நியமிக்க முடியாத அளவுக்கு நிர்ப்பந்தத்தை உருவாக்கும் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.. "தாமரை" என்ற சொல்லின் ஈர்ப்பு மெல்ல குறைந்து வருகிறது.. அந்த சொல்லின் வீரியம் மங்கி வருகிறது.
பாசமிகு அக்கா
தமிழிசை போன்ற ஒரு விசுவாசம், உண்மை, கண்ணியம் மிக்க தலைவர் இந்த கால அரசியலில் கிடைப்பதும் நாம் கண்ணால் காண்பதும் அரியது! ஆளுநராக தமிழிசை உயர்ந்தாலும்.. பாஜகவையும் தாண்டி.. தமிழிசையை நம் மக்கள் மறக்கவில்லை.. மறக்கவும் முடியாது.. எத்தனையோ பட்டங்களும், விருதுகளும் தமிழிசைக்கு கிடைத்திருந்தாலும் "அக்கா" என்ற பாசமிகு அடைமொழியை நம் மக்கள் தமிழிசை தவிர வேறு யாருக்குமே தந்தது கிடையாது.. இனியும் தர மாட்டார்கள் என்பதே உண்மை!!