பிளாஷ்பேக் 2015: 'பேச்சலர்' வாழ்க்கைக்கு குட்பை சொன்ன கிரிக்கெட் வீரர்கள்
சென்னை: 2015ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
2015ம் ஆண்டு நிறைவடைய இன்னும் 2 நாட்கள் தான் உள்ளன. புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாளை கண்விழித்து நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்க மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் 2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் விபரங்களை பார்ப்போம்.
தினேஷ் கார்த்திக்
பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது காதலியான ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் தென்னிந்திய கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.
ரோஹித் சர்மா
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது நீண்டநாள் காதலியும், மேனேஜருமான ரித்திகாவை இந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக ஜூன் மாதம் அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.
ரெய்னா
சுரேஷ் ரெய்னா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்த கையோடு ஏப்ரல் மாதம் பிரியங்கா சவுத்ரியை மணந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரியங்கா திருமணத்திற்காக வேலையை விட்டுவிட்டதாக கூறப்பட்டது.
ஹர்பஜன்
கடந்த அக்டோபர் மாதம் ஹர்பஜன் சிங் தனது காதலியும், பாலிவுட் நடிகையுமான கீதா பஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.