ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தடுப்பதாக கூறவில்லையே எடப்பாடி பழனிச்சாமி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம். இதில் விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
கோவை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் விவசாயிகளின் நலனை தமிழக அரசு பாதுகாக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈஷா யோக மைய நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, கோவை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா மக்களுக்காக செயல்படுத்த நினைத்த திட்டங்களை எஞ்சிய நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றும். சட்டசபையில், ரகசிய வாக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம். இதில் விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைந்து செயல்படுத்தப்படும், இத்திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மேம்படுத்தப்படும்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5 நாட்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நீட் தேர்வு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்.
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக வருகின்ற 27 ம் தேதி பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும். மத்திய அரசுடன் மாநில அரசு சுமூக உறவு கொண்டு இணைந்து செயல்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிலர் தவறாக புரளி கிளப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.