ஏற்காடு இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆதரவு!
நெல்லையில் இன்று சமாஜ்வாடி கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோயாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் அல்லாத மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சமாஜ்வாடி கட்சி லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது. சமாஜ்வாடி கட்சி தேசிய அளவில் இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் 3 வது அணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது.
லோக்சபா தேர்தலில் 250 க்கும் அதிகமான தொகுதியில் 3 வது அணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு பிறகு பிரதமர் யார் என முடிவு செய்யப்படும்.
ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி உள்ளது. உத்தரபிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, பீகார் போன்ற பிற மாநிலங்களில் மாநில கட்சி்களின் ஆதிக்கம்தான் உள்ளது.
பாரதிய ஜனதா குறிப்பிடுவதைபோல் மோடிக்கு அலை இல்லை. தேர்தல் வியூகம் குறித்து வரும் டிசம்பர் 21 ந் தேதி மாநில அளவிலான தொண்டர்கள் மாநாடு சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தேசியத் தலைவர் முலாயம்சிங்யாதவ், உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ், தேசிய பொதுச்செயலர் ராம்கோபால்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் டிசம்பர் 4ந் தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.