ஏற்காடு இடைத்தேர்தல்: ஓட்டு போட பணம் வாங்கினால் கைது- லவுட் ஸ்பீக்கரில் எச்சரிக்கை!
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்கள் பணம், பரிசுப்பொருள் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலி பெருக்கி மூலம் தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. தேர்தல் ஆணையம் வீடியோ கேமராக்களுடன் நகர் முழுவதும் சுற்றி தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தை கண்காணிக்க வெளிமாநிலத்தில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க கோரி அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், வேஷ்டி, சேலைகள் போன்ற பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
பல இடங்களில் இலவச வேஷ்டி சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் இதுவரை ரூ.5 கோடிக்கும் மேல் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் தருவதும், அதை வாக்காளர்கள் பெறுவதும் குற்றம் என்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்காடு தேர்தல் அதிகாரியும் சேலம் மாவட்ட கலெக்டருமான மகரபூஷணம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தேர்தல் சிறப்பு பறக்கும் படை வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதும், அதை வாக்காளர்கள் பெறுவதும் குற்றம்.
அவ்வாறு செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் எந்த பகுதியிலாவது வாக்காளர்களுக்கு பரிசு, பணம் வழங்குவது தெரிய வந்தால் அது பற்றி 18004257050 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
9 கம்பெனி துணை ராணுவப்படை
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, ‘‘ஏற்காட்டில் தற்போது 4 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது. மேலும் 5 கம்பெனி துணை ராணுவப்படை அதிகாரிகள் வர உள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் 2 பேர் வந்துள்ளனர்.
வழக்கமாக இரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் இருப்பார். ஆனால் இங்கு ஒரு தொகுதிக்கு 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லா வாக்குச்சாவடிகளிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்படும்.
அந்த கேமராக்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட் டிருக்கும். கட்டுப்பாட்டு அறையுடன் இணைப்பு கொடுக்க முடியாத வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்'' என்றார்.