ஏற்காடு தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றவேண்டும்: மு.க.ஸ்டாலின்
ஏற்காடு: இன்றைக்கு சென்னைக் கோட்டையே காலியாக உள்ளது. இருக்கும் அத்தனை அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் என மொத்தமாக இங்கு வந்து முகாம் இட்டு உள்ளனர். ஏற்காடு சட்டமன்றத் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர். வெ. மாறனை ஆதரித்து 4 நாள் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். முதல்நாளான வெள்ளிக்கிழமையன்று வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெ. மாறன், எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உங்களோடு இருந்து, உங்களுக்காக பணியாற்றக் கூடியவர். சிலர் தேர்தலுக்காக மட்டும் வரக் கூடியவர்கள். தேர்தல் வந்தால் ஹெலிகாப்டரில் கூட பறந்து வருவார்கள்.
அப்படி நேற்று இங்கு பிரச்சாரத்துக்கு வந்தவர், ஏற்காடு அதிமுக கூட்டணியின் கோட்டை எனச் சொன்னார்கள். ஆனால் இந்த இடைத்தேர்தலில் ஏற்காடு தொகுதி தி.மு.க.வின் கோட்டை என்பதை அவருக்கு பதிலாக நீங்கள் தரப் போகிறீர்கள்.
உங்கள் மூலம் நான் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் இங்கு 10 தேர்தல்கள் நடந்துள்ளது. அதில் அதிமுக கூட்டணி வேண்டுமானால் 6 முறை வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் 4 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அப்படியென்றால் இது யாருடைய கோட்டை. அவருக்கு எழுதித் தந்தவர்கள், இதை அவருக்குச் சரியாக எழுதித் தரவில்லை. அதுமட்டுமல்ல, இந்த இடைத்தேர்தல் வந்திராவிட்டால், என்ன நடந்திருக்கும். இன்றைக்கு சென்னைக் கோட்டையே காலியாக உள்ளது. இருக்கும் அத்தனை அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் என மொத்தமாக இங்கு வந்து முகாம் இட்டு உள்ளனர்.
ஆட்சியைத் தொடங்கி 3 வருடம் முடியப் போகிறது. இதுவரை முதல்வராவது, வேறு யாராவது இங்கு வந்து எட்டிப் பார்த்தது உண்டா ? இப்போது நாடகமாட, பொய் பிரச்சாரம் செய்ய இங்கு வந்து உள்ளனர்.
மின் பற்றாக்குறையை போக்க கடந்த திமுக ஆட்சியின்போது, வடசென்னையில் இரண்டு அலகுகளில் 600 மெகாவாட், 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும், மேட்டூரில் 600 மெகாவாட் உட்பட 1800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 6800 கோடி செலவிடப்பட்டு, 75 % பணிகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்தப் பணிகள் தொடரப்படாததால் மின் பற்றாகுறை, மின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
2012ல் இந்த அரசு சட்டமன்றத்தில் 8000 கோடி மதிப்பில் அறிவித்த உடன்குடி மின் உற்பத்தி திட்டம் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. அந்த திட்டத்துக்காக ஒரு பைசா கூட இதுவரை செலவிடப்பட வில்லை. திமுகவும் - மத்திய அரசும் கூட்டுச்சதி செய்வதாக பட்டியல் போட்டிருக்கிறார்.
மத்திய அரசின் சார்பில் சென்னை, மதுரவாயல் - தூத்துக்குடி இடையே பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த 4200 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் கிடப்பில் இருப்பதற்கு காரணம் யார் ? திமுக அரசு சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த போராடி செயல்படுத்திய, அதற்காக 800 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், உச்ச நீதி மன்றத்துக்குச் சென்று வழக்கு போட்டு தடை ஏற்படுத்தியது யார் ? இதையெல்லாம் தெரிந்து கொண்டால் யார் சதி செய்வது என எளிதாக தெரியும்.
இங்கே சேலத்தில் உள்ள சாலைகள் பழுதாக இருப்பது இங்கே இருப்பவர்களுக்கே நன்றாகத் தெரியுமே. இப்படிப் பட்டவர்களுக்கு, இந்த அரசுக்கு பாடம் புகட்டவேண்டும். திமுக சார்பில் படித்த, பண்புள்ள, உங்களோடு அன்போடு பழகக் கூடிய, தலைவர் கலைஞர் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட மாறனுக்கு, உதய சூரியன் சின்னத்தில் மழை போல வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.