பகலில் மீண்டும் ஃபார்முக்கு வந்த சென்னை.. பல இடங்களில் சுட்டெரித்த வெயில்!
சென்னையில் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியதால் இயல்பு நிலை மெல்ல திரும்புகிறது.
சென்னை: மாநகரின் பல இடங்களில் மீண்டும் வெயில் அடித்தது. இதனால் இயல்பு நிலை மெல்ல திரும்புகிறது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
முக்கியமாக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டியது.
மக்கள் அவதி
இதனால் சாலைகள் குளங்கள் போல் காட்சியளித்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இயல்புநிலை முடக்கம்
சென்னையில் தேங்கிய மழை நீரால் பல இடங்களில் பேருந்து சேவை துண்டிக்கப்பட்டது. ஒரு நாளை மழைக்கே சென்னையில் இயல்பு நிலை முடங்கியது.
மழை தொடரவில்லை
நேற்று பெய்த தொடர்மழையால் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழை இன்று தொடரவில்லை.
சுட்டெரிக்கும் வெயில்
இன்று காலைக்குப் பிறகு சென்னையில் மேகமூட்டங்கள் படிப்படியாக கலையத் தொடங்கின. தற்போது போரூர், வளசரவாக்கம், வடபழனி, ராமாபுரம், முகப்பேர் அம்பத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் சுள்ளென்று வெயில் அடித்து வருகிறது.
திரும்பும் இயல்புநிலை
மழைக்கான அறிகுறியே இல்லாததுபோல் வெயில் அடித்து வந்தது. இதனால் சென்னையில் இயல்புநிலை மெல்ல திரும்புகிறது.