ஜெ. விடுதலை... சந்தோஷத்தில் ‘தலைகீழாக’ நடந்த யோகா மாஸ்டர்!
கோவை: கோவையில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையான மகிழ்ச்சியில் யோகா மாஸ்டர் ஒருவர் 2 கீ.மீ தலைகீழாக நடந்து சாகசம் செய்துள்ளார்.
கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் சத்ரபதி (50). யோகா மாஸ்டரான சத்ரபதி, இன்று காலை கோவையில் டவுன்ஹால், ரங்கேகவுடர் வீதி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மக்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் தலைகீழாக நடந்து சென்றார். சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு தலைகீழாக நடந்து சென்ற சத்ரபதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.
பின்னர் தனது சாகசம் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
யோகா மாஸ்டரான நான் இதுவரை பல்வேறு சாகசங்களை செய்துள்ளேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நல்ல ஆளுமைத்திறன் உடையவர். அவரது செயல்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அதை வெளிப்படுத்தும் விதமாக இன்று தலைகீழாக நடந்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளேன். மேலும் அடுத்த மாதம் யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி பொதுமக்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இன்று தலைகீழாக நடந்தேன்' என்றார்.