அமைதி... அமைதி... 10,000 காவலர்களுக்கு மன அழுத்தம் தீர யோகா
காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க சென்னையில் மாநகர காவல்துறை சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை: காவல்துறை என்றதும் முரட்டுத்தனமான ஆட்களும், சுடும் சொற்களும்தான் நம் நினைவுக்கு வந்து செல்லும். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பார்க்காத அவலங்களை ஒரு காவலர் ஒரே நாளில் பார்த்து விடுகிறார். மரணம், அழிவு, அவலம், கோர விபத்துகள், எதிர்மறை உறவுகள், இப்படியான குற்றங்களை பார்த்து பார்த்து உணர்ச்சியற்றவர்களாக மாறுகின்றனர்.
காவலர்களுக்கு தங்கள் உரிமைகளைக் கேட்க தனி அமைப்பு என்று ஏதும் இல்லாததால்தான் எல்லா கோபதாபங்களையும் பொது மக்களிடமே காட்ட நேரிடுகிறது. தமிழகத்தில் பணியின்போது தாக்குதல்களுக்கு உள்ளாகி இறப்பதைவிட தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு காரணம் பொழுதுபோக்கு, சமூகக் கலப்பு என சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப் படுவதே.
பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்கவில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொலைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
புத்தகம் படிப்பது...
நண்பர்களுடன் இணைந்திருக்க முடியாத சூழ்நிலையால், மனதில் உள்ளவற்றை வெளிக்கொணர முடியாமல் அழுத்தத்திலேயே அமிழ்ந்து போகிறார்கள். மனதை புத்துணர்வு பெறச்செய்யும் விஷயங்களான இசை கேட்பது, புத்தகம் படிப்பது, என எந்தவித செயல்களிலும்ஈடுபட முடிவதில்லை. குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க சில உயர்அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி, காவலர்களை மன அழுத்தத்தின் உச்சத்துக்கே கொண்டு போய் விடுகிறது. இதனால் சில காவலர்கள் பகல் நேர குடிகாரர்களாகவும் மாறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
விடுப்பின்மையும்
ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள், நீதிமன்ற பணிகள், முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் என்று பல்வேறு வகையில் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். மேலும் உடல்ரீதியான பிரச்னைகள் வாட்டும் நேரத்தில் விடுப்பு எடுக்க முடியாது. இரவு நேரப்பணி போன்றவையும் இவர்களை சோர்வடையச் செய்கிறது. இதன் விளைவாக நேர்ந்ததுதான், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த திருவள்ளூர் தலைமை காவலர் கோபியின் மரணம். உடல்நலம் சரியில்லாத காரணத்தால் விடுப்பு கேட்டும் கோபிக்கு விடுமுறை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பழவேற்கேட்டில் கடலோர பாதுகாப்பு பணியின் ஒத்திகையின்போது ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கோபிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு உயிரையே குடித்துவிட்டது.
தற்கொலை முயற்சி
அதேபோல, கடந்த 21-ம் தேதியன்று, சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள ரகு, கணேஷ் ஆகியோர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றபோது, அவர்கள் சொன்ன காரணம், உயரதிகாரிகள் தங்களை சாதிரீதியாக இடமாற்றமும், பணி ஒதுக்கீடும் செய்கின்றனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர். ஆனால் அன்றைய தினமே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாரின் மன அழுத்தத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தது காவல்துறை குடும்பத்தார்களின் நெஞ்சில் பாலை வார்த்ததுபோல் இருக்கிறது.
தியான பயிற்சியும்
அதற்கான நடவடிக்கையையும் சென்னை மாநகர காவல் ஆணையர் நேற்றே தொடங்கிவிட்டது கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது., காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கி மன உறுதி அளித்திடும் வகையில் சென்னை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சியை மேற்கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தொடங்கிய யோகா பயிற்சியில், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அத்துடன் சென்னையில் பணிபுரியும் 10 ஆயிரம் காவலர்களுக்கு, எழும்பூர், மாதவரம், வேப்பேரி உள்ளிட்ட 13 இடங்களில் முதற்கட்டமாக யோகா, தியானப் பயிற்சி அளிக்கப்பட்டிப்பது உண்மையிலேயே மெச்சத்தகுந்ததே.
உளவியல் ஆலோசனை
அப்போது பேசிய ஆணையர் விஸ்வநாதன், அடுத்த வாரம் இரண்டாம் கட்டமாக 10,000 போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் காவல் துறையினருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் யோகா பயிற்சி மட்டுமே காவலர்களின் மன அழுத்தத்தை போக்கிவிடாது என்பதையும் அரசு உணரவேண்டும்.
பாதுகாப்பான பயிற்சி
புற சூழ்நிலை இனிமையாக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் காவலர்களின் உரிமைகளை கேட்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். மனம் சார்ந்த பல்வேறு உடற்பயிற்சிகளை கூடுதலாக காவல்துறை பயிற்களுடன் இணைக்க வேண்டும், ஆயுதங்களைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தவும், அதற்கான பயிற்சியையும் முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
கவுன்சிலிங் தேவை
மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக விளையாட்டுகள், கவுன்சிலிங், பொழுது போக்குகள் போன்ற சில ஏற்பாடுகளையும் அரசு கொடுக்க வேண்டும், நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு என மக்களை நேரிடைய சந்திக்கும் துறை காவல்துறை ஆகும். காவலர்களின் இன்னல்களை பொதுமக்களும் உணர்ந்து இணக்கத்துடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் எளிதில் புலப்படும் காவல்துறை நம் நண்பன் என்பது.