யோகாவை கட்டாயமாக்கக் கூடாது - எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
சென்னை: மதநம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் யோகாவை கட்டாயமாக்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்லும் முகமாக வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகா தினத்தை கொண்டாட மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால் உடல் நலனுக்கு பயிற்சி அளிக்கும் உடற்பயிற்சி என்றளவில் இதனை முன்னெடுக்காமல், மதவாத சிந்தனையுடன் யோகா தினத்தை கட்டாயமாக கடைபிடிக்க மத்திய அரசும், சங்க்பரிவார் அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. மேலும் மற்ற மதங்களின் இறைநம்பிக்கையை குலைக்கும் வகையில், சூரிய நமஸ்கார ஆசனத்தையும் கட்டாயமாக செய்ய மத்திய அரசு வலியுறுத்தியபோது, அதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்ததை தொடர்ந்து சூரிய நமஸ்காரம் மட்டும் கட்டாயமாக்கப்படவில்லை.
இருப்பினும் பாஜகவின் எம்.பிக்கள் சிலர் சூரிய நம்ஸ்காரம் செய்யாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்பது போன்ற வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். யோகா தினத்தின் பெயரால், அதனை கட்டாயமாக்குவதும், மற்றவர்களின் இறை நம்பிக்கை விசயத்தில் குறுக்கீடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சர்வதேச யோகா தினத்தை அறிவிப்பு செய்த அதே ஐ.நா அவையின் அறிக்கையின் படி, இந்தியாவில் 19.46 கோடி மக்கள் பட்டினி மற்றும் போதிய ஊட்டச்சத்து இன்றி வாடுவதாகவும், இதில் குழந்தைகள் 1.95 கோடி பேர் எனவும், உலகிலேயே இந்தியாவில் தான் பட்டினிச் சாவுகள் அதிகம் எனவும் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இதனை தடுக்க இந்தியா போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை சரிசெய்ய மோடி அரசு முயற்சிக்காமல், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. இது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும்.
ஆகவே, மத்திய அரசு யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்காமல், பிறரின் மதநம்பிக்கைகளை சீர்குலைக்காமல் அதனை ஒரு உடற்பயிற்சி என்ற அளவிலே மட்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் தமிழக பள்ளிகளிலும் இந்த கோரிக்கையை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.