மழை நேரத்து வாகன நெரிசலை நீங்கள் நினைத்தால் குறைக்க முடியும், இப்படி!
சென்னை: மழை, வெயில் இரண்டு பருவத்திலுமே சென்னை போன்ற பெரு நகரவாசிகளைப் பாடாய்ப் படுத்துவது போக்குவரத்து நெரிசல். நிமிடக் கணக்கில் அல்ல... மணிக் கணக்கில் நீள்கிறது அந்த நரக நகர்வு!
இந்த ஆண்டு பெருமழைக் காலம். கடந்த 20 நாட்களில் சில தினங்கள் மட்டும் ஓய்வு கொடுத்து, போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது மழை.
மழையைக் குறை சொல்ல முடியாது. அதற்கான குறைந்தபட்ச யோக்கியதை கூட தமிழகத்திலுள்ளவர்களுக்குக் கிடையாது.
சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்குச் சென்று வர 11 மணி நேரமானது இரு வாரங்களுக்கு முன்பு. நான்கு இடங்களில் சாலையில் நான்கடி உயரத்துக்குப் பெரு வெள்ளம்.
கிண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் வரை பூந்தமல்லி சாலையில் சென்றாலும் சரி, அனகாபுத்தூர் வழியாகச் சென்றாலும் சரி... போய் வர குறைந்தது 6 மணி நேரம், இன்றைக்கும்.
அனைத்து சுரங்கப்பாதை வழிகளும் அடைக்கப்பட்டுவிட்ட இந்த பெருமழை நாளில் வடபழனி, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து கிண்டி வரை வரவே 4 மணி நேரம்.
நண்பர் ஒருவர் வளசரவாக்கத்திலிருந்து போரூருக்கு காரில் வரும் போதே வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், இரவு உணவு, க்ரில் சிக்கன் எல்லாவற்றையும் வாங்கிவிட்டாராம். அத்தனை நிதான போக்குவரத்து!
ஏன் இந்த ட்ராபிக்...? காரணம் நாம்தான். சிலவற்றைத் தவிர்த்தால், நம் பங்குக்கு மழைநேர ட்ராபிக் நரகத்தைச் சீர் செய்ய முடியும்.
- பெருமழைக் காலங்களில் அவசியப் பணிகள் இருந்தால் ஒழிய வாகனங்களை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேலையும் இல்லாவிட்டால் வீட்டில் இருக்கலாம்.
- சினிமா பார்க்க, பார்ட்டிகளுக்கு, வேடிக்கைப் பார்க்க, வெட்டி ஷாப்பிங் என கூட்டமாகக் கிளம்பி சாலையில் குவிவதைத் தவிர்க்க முடியும்.
- 'மெதுவாக செய்யலாமே' என்பது போன்ற காரியங்களை மழை நாளில் வைத்துக் கொள்ளாமலிருப்பது போக்குவரத்தை இயல்பாக வைத்துக் கொள்ள உதவும்.
- சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், கார்களைத் திருப்புவதால் பெரும் (Heavy) வாகனங்கள் திணறி நிற்கின்றன. ஒரு நிமிடம் தாமதித்து, போக்குவரத்தை அடைக்கக் காரணமாக உள்ள அந்த பெரும் வாகனங்களுக்கு வழிவிட்டால் ஒன்றும் குறைந்துவிட மாட்டோம்! இதற்கு பெஸ்ட் உதாரணம்: வடபழனி - போரூர் சாலை.
- சாலைகள் அத்தனையும் உழுதுப் போட்ட வயலைவிட மோசமாக உள்ளன. ஆங்காங்கே மரணக் குழிகள் வேறு. இந்த சூழலில் பெரும்பாலும் அரசுப் போக்குவரத்துதான் சிறந்தது, தாமதமானாலும்.
- மழைக்காக விடுமுறை அனுமதிக்கும் அலுவலகம் வாய்த்த பாக்கியவான்கள் சந்தர்ப்பத்தைத் தவற விட வேண்டாம்.
- அப்புறம்.. மழை வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கிறேன் பேர்வழி எனக் கிளம்பிப் போய் பெரும் கூட்டம் சேர்த்து, வாகனங்களை தாறுமாறாக நடுச்சாலையில் நிறுத்திவிட்டு ஆ வென வாய் பிளந்து நிற்பதில் ஒரு குறைந்தபட்ச ஒழுங்கைக் கடைப்பிடிக்கலாம். ராமாவரம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில் அடையாறு நுழையும் மேம்பாலங்களில் ஒரு வாரமாக இந்த வேடிக்கை மனிதர்களால்தான் பெரும் வாகன நெரிசல். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நான்கு கிமீ முன்பிருந்தே திருவிழாக் கூட்டம்.
- இத்தனை நாள் மழை வேறு... அடுத்து வரும் மூன்று தினங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்கள் வானிலை ஆய்வு மையத்தினர்.
மற்றபடி எல்லோருக்கும் அந்த நேரத்தில் அவரவர் வேலை முக்கியம். எது முக்கியமில்லாதது என்பதை அவரவர் முடிவு செய்துகொள்ளலாம்!