திமுகவில் என்னை வஞ்சம் தீர்த்து அவமானப்படுத்தி விட்டனர்- கருப்பசாமி பாண்டியன் புகார்
நெல்லை: திமுகவில் என்னை வஞ்சம் தீர்த்து அவமானப்படுத்தி வெளியேற்றினர். இப்போது தவறை உணர்ந்து என்னை அடையாளப்படுத்திய அதிமுகவில் இணைந்து அடி மட்ட தொண்டனாக இருந்து பணியாற்ற அம்மாவிடம் அனுமதி கேட்டுள்ளேன் என்று திமுக முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கூறியுள்ளார். அதிமுகவில் இணைந்து நெல்லை மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி கட்சித் தலைமை பதவியில் இருந்து உத்தரவிட்டது. இதனால், கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அவர் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கினார். மேலும் அவர் மாற்றுக் கட்சியில் இணையவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கருப்பசாமி பாண்டியனை சேர்க்க மாற்றுக் கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதாக செய்திகள் வெளியாயின. இதனால் அவரது அரசியல் பயணத்தில் தடை ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரிக்கைகளில் என்னை நேர்காணல் செய்யாமலேயே, நேர்காணல் செய்ததாக செய்தி வந்துள்ளது. இது அரசியலில் இருந்து என்னை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட சதியாகும். நான் கடந்த 43 ஆண்டுகளாக முழுநேர கட்சி பணி மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போதே எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்தேன்.
இதையடுத்து, 1972 ம் ஆண்டு கட்சியில் எம்ஜிஆரோடு என்னை இணைத்துக்கொண்டு, கட்சிப் பணியில் கிளைச்செயலாளர், நாடாளுமன்ற பொருளாளர், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், 3 முறை எம்எல்ஏ என்று அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். இப்போது ஒரு நாளிதழ் என்னிடம் நேர்காணல் நடத்தாமல், என்னைப்பற்றி அவதூறுகளை வெளியிட்டுள்ளது. என் அரசியல் வாழ்க்கையை சீர்குலைக்க நடைபெற்ற சதியாக தெரிகிறது.
என் கடைசி மூச்சு வரை நெல்லை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் நோக்கத்தில் அதிமுகவில் இணைய விண்ணப்பம் தெரிவித்துள்ளேன். தாயிடம் கோபித்துக் கொண்ட பிள்ளைபோல வெளியேறி 15 ஆண்டுகள் வனவாசம் சென்று, என் உழைப்பு முழுவதும் வீணானது. திமுகவில் என்னை வஞ்சம் தீர்த்து அவமானப்படுத்தி வெளியேற்றினர்.
இப்போது தவறை உணர்ந்து என்னை அடையாளப்படுத்திய அதிமுகவில் இணைந்து அடி மட்ட தொண்டனாக இருந்து பணியாற்ற அம்மாவிடம் அனுமதி கேட்டுள்ளேன். அம்மாவின் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.
அதிமுகவில் இணைந்த பிறகு இது வரை காணாத கருப்பசாமி பாண்டியனை இந்த மாவட்டம் பார்க்கும். பேசும் மேடைகளில் வார்த்தைகளை விட அனல் பறக்கும். திமுகவின் முகத்திரையினை ஆதாரங்களோடு கிழிப்பேன். திமுகவில் என் நெஞ்சில் குத்தியவர்கள் அதிகம். முதல்வர் எனக்கு பதவிகள் தரவில்லை யென்றாலும் அவரது தொண்டனாக இருந்து இம்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற பாடுபடுவேன்.
என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட பேப்பர், மறுப்பு செய்தி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியான போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் கருப்பசாமி பாண்டியன்.