பழங்குடி பெண்களை சிஆர்பிஎப் வீரர்கள் பலாத்காரம் செய்ததற்கு பதிலடி தந்தாச்சு- சொல்வது மாவோயிஸ்டுகள்!
பழங்குடி பெண்களை மத்திய ரிச்ரவ் போலீஸ் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு பதிலடியே சத்தீஸ்கர் தாக்குதல் என்று மாவோயிஸ்டுகள் நியாயப்படுத்தியுள்ளனர்.
ராய்ப்பூர்: பழங்குடி இனப் பெண்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு பதிலடியே சுக்மா தாக்குதல் என்று மாவோயிஸ்ட் இயக்கம் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் என்றாலே அது மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகவே கருதப்படுகிறது. இப்பகுத்யில் கடந்த திங்கள்கிழமையன்று 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 26 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாவர்.
பழிக்கு பழியாம்
நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சிஆர்பிஎஃப் படைக்கு தலைமையை இல்லாததே காரணம் என்ற சொல்லப்பட்டது. இந்நிலையில் இது பழிக்கு பழி என்று மாவோயிஸ்ட் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் விகல்ப் தெரிவித்துள்ளார்.
பலாத்கார புகார்
இதுகுறித்து அவர் பேசிய ஆடியோ பதிவு வெளியானது. அதில், எங்கள் பழங்குடியின பெண்களை பாதுகாப்புப் படையினர் பாலியல் பலாத்காரம் செய்து அவர்களது வாழ்வை நாசமாக்கியுள்ளனர். அதற்கான பழிக்கு வாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பதிலடி மூலம் எங்கள் பழங்குடியின பெண்களின் கண்ணியத்தை காத்துள்ளோம்.
உடல்களை சிதைக்கவில்லை
ஹிந்துத்துவ, பாஜக, சங்க பரிவாரங்கள்கள் நேரடியாகவோ, போலீஸ், பாதுகாப்பு படையினர் மூலமாகவோ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தும் தாக்குதலுக்கும் இது பதிலடியாகும். கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை மாவோயிஸ்ட்கள் சிதைத்ததாகவும் பெரு நிறுவனங்களின் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
சாலைகள் கூடாது..
வீரர்களின் உடல்களை நாங்கள் மரியாதை குறைவாக நடத்தியதே இல்லை. அவர்கள் எங்களுக்கு விரோதி அல்ல. அவர்களின் செயல்கள்தான் எங்களுக்கு ஆத்திரமூட்டின. பொதுமக்களின் நலனுக்காக பாடுபடாமல் அரசியல்வாதிகள், பெருநிறுவன மாஃபியாக்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்காக போராடுவதை வீரர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். காடுகளில் இருந்து இயற்கை வளங்களை கொள்ளையடித்து போடப்படும் சாலைகளை அமைக்கக் கூடாது என்று விகல்ப் கூறியுள்ளார்.