ஆர்வத்துடன் அறிவாலயத்திற்குப் படையெடுத்து வரும் இளைஞர் படை.. டிக்கெட் கிடைக்குமா?
சென்னை: திமுகவில் வழக்கமாக நிறைந்த அனுபவம் கொண்டோர், கட்சியின் மூத்த தொண்டர்கள், நிர்வாகிகள்தான் பெரும்பாலும் டிக்கெட் கேட்க அதிக அளவில் திரண்டு வருவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அது மாறிப் போய் விட்டது. இந்த முறை ரொம்பவே குறைந்து காணப்படுகிறது.
எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் இளையோர் டிக்கெட் கேட்க குவிந்து வருகின்றனர். இதன் மூலம் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிக அளவில் இளையவர்களுக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல பரிந்துரையுடன் வருகிறவர்களுக்கு சீட் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பில்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள். முழு மெரிட்டுடன் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
திமுக நேர்காணல்
சட்டசபைத் தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட விரும்பி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேற்று முதல் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணலை நடத்தி வருகிறது திமுக தலைமை.
கரை வேட்டி கம்மி.. பேன்ட் சட்ட ஜாஸ்தி!
வழக்கமாக திமுக பார்டர் போட்ட கரை வேட்டிகளையும், கருப்பு, சிவப்பு நிற உடையில் வருகிறவர்களையும்தான் அதிகம் பார்க்கலாம் இதுபோன்ற சமயத்தில். ஆனால் இப்போது மாடர்ன் யுகமாகி விட்டது, இளைஞர்களின் காலமாகி விட்டது என்பதை திமுக நேர்காணல் உணர்த்துகிறது.
இளையோர் முகம் அதிகம்
நேர்காணலுக்கு வருகிறவர்களில் பலரும் இளையோர்களாக உள்ளனர். துடிப்புடன் செயல்படும் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். நிறையப் படித்தவர்களாக உள்ளனர்.
எம்.பி.ஏ பட்டதாரிகள் அதிகம்
வருகிறவர்களில் எம்.பி.ஏ படித்தவர்கள் நிறையப் பேர் உள்ளது ஆச்சரியமானது. அதேபோல வக்கீல்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என பலதுறையினரும் நேர்காணலுக்கு வருகின்றனர்.
நாங்குநேரிக்கு டிக்கெட் கேட்கும் எச்.ஆர். மேனேஜர்
மும்பையில் உள்ள ஒரு வர்த்தக கல்லூரியில் எம்.பி. ஏ. படித்து விட்டு தற்போது எச்ஆர் மேனேஜராக இருக்கும் ஆரோக்கியநாதன் என்பவர் நாங்குநேரியில் போட்டியிட சீட் கேட்டு வந்திருந்தார்.
பொறியாளர்கள்
அதேபோல நிறையப் பொறியாளர்களும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். நாங்கள் எல்லாம் பொறியியல் படிப்புப் படிக்க இட ஒதுக்கீடுதான் காரணம். அதற்கு முதல் அடிப்படையை அமைத்துக் கொடுத்த இயக்கம் என்ற வகையில் திமுக மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்று அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
பரிந்துரைக்கு இடமில்லை
நேர்காணலின்போது பரிந்துரைகளுக்கு இடமில்லை என்று கூறி விட்டதாம் தலைமை. நீங்க கட்சிக்கு என்ன செய்திருக்கீங்க. என்ன செய்வீங்க, உங்களது செயல்பாடு எப்படி என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு சரியான பதில் தருவோருக்கு மட்டுமே பரிசீலனைப் பட்டியலில் இடம் கொடுக்கப்படுகிறதாம்.
மாறி விட்டது திமுக
திமுக முன்பு போல இல்லை. பரம்பரை பரம்பரையாக டிக்கெட் கொடுத்து வந்த காலம் மலையேறி விட்டது. இப்போது இளையோருக்கு அதிக முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துள்ளது என்று திமுகவினரே கூறுகின்றனர். பார்க்கும்போதும் அப்படித்தான் தெரிகிறது.