எனக்கு அவன் வேணும்! - ஒருதலைக்காதலால் போலீசிடம் அடம்பிடித்த இளம்பெண்
மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் பகுதியில் தான் ஒருதலையாய் காதலித்த வாலிபரையே தனக்கு திருமணச் செய்து வைக்கக் கோரி இளம்பெண் ஒருவர் போரட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அந்த இளம்பெண் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.
சந்திப்பால் ஏற்பட்ட ஈர்ப்பு:
ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இதில், அந்த இளம்பெண்ணுக்கு வாலிபர் மீது காதல் ஏற்பட்டது.
இளைஞருக்கு காதல் இல்லை:
ஆனால் அந்த இளைஞரோ அப்பெண்ணை விரும்பவில்லை. இதனை அறிந்ததும், இளம் பெண் மனம் வருந்தினார். ஆசைப்பட்ட வாலிபரை எப்படியாவது திருமணம் செய்ய முடிவு செய்தார்.
போலீஸில் புகார்:
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று அந்த வாலிபர் மீது ஒரு புகார் கொடுத்தார்.
திருமணம் செய்து வை:
தானும், அந்த இளைஞரும் விரும்பியதாகவும் தற்போது அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் எனவே அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
திடுக்கிட்ட போலீஸார்:
இதைப்பார்த்து திடுக்கிட்ட போலீசார் மனுவை சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் அளிக்கும்படி தெரிவித்தனர். அந்த இளம் பெண்ணும் சளைக்காமல் மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் சென்று மீண்டும் ஒரு மனு கொடுத்தார்.
ஒருதலைக்காதல் அறிவீனம்:
அங்கு போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறினர். கவுன்சிலிங்கும் கொடுத்தனர். விரும்பாத வாலிபரை திருமணம் செய்ய நினைப்பது அறிவீனம் என்பதை எடுத்துரைத்தனர். அவரது பெற்றோருக்கும் புத்திமதி கூறி மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
மீண்டும் கூச்சல்:
ஆனால், போலீஸ் நிலையத்தில் இருந்து கிளம்பி காரில் வந்தபோது மீண்டும் அப்பெண் கத்தி, கூச்சல் போட்டார். அதனால் மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு கடும் அறிவுரைக்குப் பின்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.