பெற்ற பச்சிளம் பெண் குழந்தையை வேலூர் மருத்துவமனையிலேயே விட்டு சென்ற இளம்தாய்
பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே பெண் ஒருவர் விட்டு சென்றுள்ளார்.
திருவண்ணாமலை: முறைதவறி பிறந்ததால், பெற்ற பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து விட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அருகேயுள்ள உள்ள கிராமம் பையூர். இங்கு வசித்து வருபவர் லட்சுமி. 18 வயதான இவர், ஆரணியை சேர்ந்த ஒருவரை கடந்த 2 வருடங்களாக விரும்பி வந்துள்ளார்.
கர்ப்பமடைந்த லட்சுமி
இதனால் இருவரும் நெக்கமாக பழகினார்கள். ஒருகட்டத்தில் திருமணமாகாமலேயே லட்சுமி கர்ப்பமடைந்தார். இதைப்பற்றி அந்த நபருடன் சொல்ல முயன்றபோது அவர் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, அவரை விட்டு விலகினார்.
ஊருக்கு திரும்பிய லட்சுமி
வீட்டுக்கு தெரியாமல் இதனை மறைத்து வந்த லட்சுமி. கர்ப்பகாலம் நெருங்கியதும், வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பெற்ற குழந்தை என்றும் பாராமல், அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி விட்டார் லட்சுமி.
குழந்தையை விரும்பவில்லை
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டபோது லட்சுமி கொடுத்த முகவரியை வைத்து அவரை தேடி வந்து குழந்தையை ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனாலும் அந்த குழந்தை தன்னுடன் இருப்பதை லட்சுமி விரும்பவில்லை.
நோயாளி போல நடித்தார்
ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேண்டுமென்றே நோயாளி போல சேர்ந்து தங்கி, பின்னர் அங்கு தன் 7 நாள் குழந்தையை மீண்டும் விட்டுவிட்டு வந்துவிட்டார். இதனால் ஆரம்பசுகாதார மருத்துவர்கள், திருவண்ணாமலை சமூக பாதுகாப்புதுறையிடம் அந்த குழந்தையை ஒப்படைத்தனர். அங்கு அந்த குழந்தை நல்ல முறையில் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.