திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்..வரதட்சணை கொடுமை காரணமா?
சேலம்: சேலம் அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் நித்யா. தாரமங்கலம் அருகே சேடபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் பசுபதியும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் விவகாரம் அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.பெற்றோரின் எதிர்ப்பை மீறி நித்யா திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்த நிலையில், நித்யா மீது சந்தேகப்பட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், வரதட்சணை வாங்கி வருமாறு பசுபதி நித்யாவை தாக்கியதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.