சிப்ஸ், கார சேவுக்கு டாட்டா... பாதாம் பருப்பு, உலர் பழங்களுக்கு மாறும் இந்திய இளைஞர்கள்- சர்வே
சென்னை: தட்டு நிறைய சிப்ஸ், கார சேவு போன்ற நொறுக்குத் தீனிகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு டிவியோ, கம்யூட்டரோ பார்த்த காலம் மலையேறி வருகிறது. தற்போது பெரும்பாலான இந்திய இளைஞர்கள் சத்தான நொறுக்குத் தீனி சாப்பிடுவதற்கு மாறி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நொறுக்குத் தீனிகளை ஆர்வமாக ஏராளமானோர் உட்கொள்வதால் உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு பழக்கவழக்கங்களை முறைப்படுத்த வேண்டும் என்று பல வளர்ந்த நாடுகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
97 சதவிகித இந்தியர்கள் பாதாம், முந்திரி, உள்ளிட்ட உலர் கொட்டை பருப்புகளை மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் சாப்பிடுவதற்கு ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கும் போது மட்டுமல்லாது மன அழுத்தத்தின் போது நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நொறுக்குத்தீனி ஆய்வு
இப்சாஸ் மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் சார்பில், இளைஞர்கள் மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சண்டீகர், நாக்பூர், போபால் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் வசிக்கும் 3,037 பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
விருப்பமான தீனி
மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் என்னென்ன நொறுக்குத் தின்பண்டங்களை சாப்பிடுவீர்கள்?' என்ற கேள்விக்கு, 97 சதவீதம் பேர், பாதாம் பருப்பை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தத்தின் போது உணவு
அதேபோல், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களில், 30 சதவீதம் பேர், மன அழுத்தம் அதிகமாக காணப்படும் நிலையில், பசியில்லாமலே அதிக நொறுக்குத் தீனி உண்ணத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ளனர்.
பாதாம் பருப்பு
கோவை, பெங்களூரு, சண்டீகர் ஆகிய நகரங்களில் 99 சதவீதம் பேர், பாதாம் பருப்பை தங்கள் விருப்பமான நொறுக்கு தீனி எனத் தெரிவித்துள்ளனர். பல்வேறு பழவகைகளும், உலர் பழங்களையும் தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சியின் வெளிப்பாடு
நொறுக்குத் தீனி என்பது, மகிழ்ச்சியின் வெளிப்பாடு. மகிழ்ச்சியான தருணங்களில் தங்கள் நாக்குக்கு ருசியாக, சூடான, மொறுமொறுப்பான, புதுவிதமான நொறுக்குத் தீனிகளை உண்ண வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நேர்மறை மனநிலை
அதே சமயத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும், சத்தான, நேர்மறையான மனநிலையை வெளிப்படுத்தும் உணவுகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் இன்றைய இளம் தலைமுறையினரும், மேல் தட்டு மக்களும் அக்கறையுடன் உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெருநகரங்களில் மன அழுத்தம்
டெல்லி, மும்பை, சண்டிகர், பெங்களூர், ஹைதராபார், நாக்பூர், போபால் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் 18 வயது முதல் 35 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மன அழுத்தத்தின் போது அதிக நொறுக்குத்தீனி உண்ணுவதாக கூறியுள்ளனர்.