ஆட்டோவில் வந்திறங்கிய பெண்.. மெல்ல நடந்தார்.. நடு ரோட்டில் கத்திக்குத்து.. பெட்டியை திறந்தால்???
கஞ்சா கடத்திய பெண்ணுக்கு முகத்தில் கத்திகுத்து விழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: கலிகாலம்!!! நாடு போகிற போக்கை பார்த்தாலே நடுக்கம்தான் வந்து போகுது. சென்னையில் நடந்த இந்த சம்பவமும் அப்படித்தான்!
போரூர் சிக்னல் அருகில் ஒரு பெண் ஆட்டோவில் வந்து இறங்கினார். அவர் கையில் ஒரு சூட்கேஸ். அமைதியாக சூட்கேசுடன் ரோட்டோரம் நடந்து செல்ல ஆரம்பித்தார். அப்போது திடீரென பைக்கில் வந்த ஒருவர், அந்த பெண்ணை வழி மறித்தார். அந்த பெண்ணிடம் சூட்கேசை பிடுங்கினார்.
கத்தியால் கிழித்தார்
ஆனால் கெட்டியாக பிடித்து கொண்டு சூட்கேசை தர மறுத்தார் அப்பெண். இருவருக்கும் சண்டை நடுரோட்டிலேயே ஆரம்பமானது. சண்டையை பார்த்ததும் மக்கள் திரண்டுவிட்டார்கள். இதனால், அந்த பைக் ஆசாமி, திடீரென அந்த பெண்ணின் முகத்தில் கத்தியால் சர் சர் என குத்தினார். பிறகு மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்தார்.
போலீசார் விசாரணை
ரத்தம் கொட்டி வலியால் துடிந்த அந்த பெண்ணை வேடிக்கை பார்த்த மக்களே அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவல் வளசரவாக்கம் போலீசாருக்கு கிடைத்து, அவர்கள் மருத்துவமனைக்கே வந்துவிட்டார்கள். இப்படி ஒரு பெண்ணை அநியாயமா குத்திட்டு சென்றுவிட்டவர் யாராக இருக்கும்? என்று போலீசார் விசாரணையில் இறங்கினர்.
மொத்தம் 60 கிலோ?
இவ்வளவு பெரிய கத்திகுத்துக்கு காரணமான அந்த சூட்கேஸ் மீது சந்தேகம் வந்தது. அதில் என்னதான் இருக்கும் என்று திறந்துபார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேஸ் முழுதும் வெறும் கஞ்சா பொட்டலங்கள்தான். மொத்தம் 60 கிலோ கஞ்சாவாம். ஆந்திராவை சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் ரேணுகா. ஏதோ அடிதடி கேஸ் என்று வந்த போலீசார், இப்போது இந்த கேஸை போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றி விசாரணையை துவங்கியுள்ளனர்.
யாரை நம்புவது?
இரண்டு நாளுக்கு முன்பு கஞ்சா மும்தாஜ், இப்போது கஞ்சா ரேணுகா! "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்"-என்று ஒரு சினிமா பாட்டு இருக்கு. ஆனால் சில 'பேதை'களே இப்படி 'போதை'களில் ஈடுபட்டால் உண்மையில் யாரைத்தான் நம்பி தொலைப்பது?