பெரியப்பாவினை கொலை செய்து சரணடைந்த இளைஞர்- தலைதெறிக்க ஓட்டம் பிடித்த அதிகாரிகள்
அரியலூர்: அரியலூரில் பெரியப்பாவை கொலை செய்து சரண் அடைந்த இளைஞரைக் கண்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்த அதிகாரிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உள்ள நல்லநாயகபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேல். இவர் ஒன்றிய அதிமுக பிரதிநிதியாக உள்ளார். இவருடைய பெரியப்பா தனவேல். இவர் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று தனவேலை வீடு புகுந்து தமிழ்வேல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.
இந்த சம்பவம் நடந்தவுடன் செந்துறை காவல்நிலைய போலீசாரிடம் தமிழ்வேல் சரண் அடைந்தார். பின்னர் போலீசாரிடம் தமிழ்வேல், "தனவேல் எனக்கு பல்வேறு வகைகளில் அவ்வப்போது இடையூறு கொடுத்து வந்தார். இதுகுறித்து 3 முறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன். போலீசார் அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை அழைத்து விலகிப்போ என்று கூறி வந்தனர். தொடர்ந்து இடையூறு செய்து வந்த தனவேல் குறித்து சிதம்பரம் தொகுதி எம்பி சந்திரகாசிக்கு புகார் அனுப்பியும் அவரும் கண்டுகொள்ளவில்லை.
இந்தநிலையில் எனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நான் முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்துவதாக அதிகாரிகளுக்கு பொய் புகார் கூறி, அதிகாரிகளை வரவழைத்து என் கொட்டகைகயை பிரித்தனர். ஏன் என்று கேட்டேன். அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். என் மீது தவறு இருந்தால் வழக்கு போடலாம். அதைவிட்டு என்னுடைய இடத்தில் நான் கட்டிய கொட்டகையை ஏன் பிரிக்க வேண்டும். இதற்கு தனவேல்தான் காரணம் என்று அறிந்ததால், நேராக தனவேல் வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்தேன் என்றார்.
இதற்கிடையே தனவேல் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து, தமிழ்வேலின் கொட்டகையை பிரித்த அதிகாரிகள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.