இளைஞர் மர்ம மரணம்.... பாரா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் மீது போலீஸில் புகார்
இளைஞர் மர்ம மரணம் தொடர்பாக பாரா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் இளைஞரின் தந்தை புகார் அளித்தார்.
சேலம்: சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ரியோவில் கடந்த 2016-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.
இந்நிலையில் மாரியப்பன் ரூ.27 லட்சத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது. சாலையில் இருந்த அந்த காரை அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவர் தன் பைக்கில் இடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை கண்ட மாரியப்பனும், அவரது நண்பர்களும் தட்டி கேட்டதோடு வீடு புகுந்து சேதத்துக்கு உண்டான செலவை தருமாறு மிரட்டனராம். அதற்கு சதீஷ்குமார் வண்டி சேதத்திற்காகும் செலவை தான் ஏற்பதாக கூறியும் அவரிடம் இருந்த செல்போனை மாரியப்பனும், நண்பர்களும் பறித்து சென்றனராம்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் சதீஷ்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெரியவடகம்பட்டி அருகே உள்ள ரயில் நிலைய தண்டவாளத்தில் சதீஷ்குமார் சடலமாக கிடந்தார்.
இவரது சாவில் மர்மம் இருப்பதாக இறந்த சதீஷ்குமாரின் தந்தை மூர்த்தி, மாரியப்பன், அவரது தாய் சரோஜா, மாரியப்பனின் நண்பர்கள் ஆகியோர் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.