நள்ளிரவு பைக் ரேஸ் விட்டதில் விபரீதம் – விபத்தில் சிக்கி 20 வயது இளைஞர் பலி
சென்னை: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 20 வயது இளைஞர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 20 வயதான அரவிந்த் என்பவர், தனது நண்பர்களுடன் கடற்கரை சாலையில் இருந்து பைக் ரேஸ் கிளம்பியுள்ளார். அரவிந்த் வாகனத்தில் மொத்தம் 3 பேர் இருந்துள்ளனர்.
ரேஸில் பங்கேற்ற இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்துகொண்டிருந்தன.
அப்போது அருகே இருந்த தெரு வழியாக பிரதான சாலைக்கு நுழைந்த சைக்கிள் ரிக்சா மீது அரவிந்த் ஒட்டிவந்த பைக் இடித்து, அருகில் இருந்த தொலைபேசி இணைப்பு பெட்டி மீது மோதி சிதைந்தது.
இந்த விபத்தில் பைக்கில் அமர்ந்திருந்த அரவிந்த்தும், இரண்டாவதாக அமர்ந்திருந்தவரும் படுகாயம் அடைந்தனர். மூன்றாவதாக அமர்ந்திருந்தவரும், சைக்கிள் ரிக்சா ஓட்டி வந்தவரும் லேசான காயம் அடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த அரவிந்த், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.