ஒருதலைக்காதல் விபரீதம் – தனக்குத்தானே நெருப்பு வைத்து காதலித்த பெண்ணையும் கட்டிபிடித்த இளைஞர்
கடலூர்: கடலூரில் ஒருதலைக்காதலால் தீக்குளித்த இளைஞர் ஒருவர் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அப்பெண் படுகாயமடைந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நடியப்பட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்துள்ளார்.
அப்போது அதே பள்ளியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த அனுசுயா என்பவரும் பிளஸ்- 2 படித்து வந்துள்ளார். அன்று முதல் சந்தோஷ் அனுசுயாவைக் காதலித்து வந்துள்ளார்.
சந்தோஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியிலும், அனுசுயா கோவை தனியார் கல்லூரியிலும் படித்த போதும் அனுசுயா சந்தோஷின் காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில் கல்லூரிப் படிப்பை முடித்த அனுசுயா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணிக்கு தினமும் பாலக்கோட்டில் இருந்து வேலைக்குச் சென்று வருகிறார். இதையறிந்த சந்தோஷ், அனுசுயாவை திருமணம் செய்துகொள்வதற்காக அவரது வீட்டுக்குச் சென்று பெண் கேட்டாராம். இதற்கு அனுசுயா குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் புதன்கிழமை அனுசுயா கெலமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலை வாங்கி அதை தன்மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்ட அவர் பேருந்தில் இருந்து இறங்கிய அனுசுயாவையும் கட்டிப் பிடித்துள்ளார்.
இதில் அப்பெண்ணின் உடலிலும் தீப்பற்றியது. இதைக் கண்ட பொதுமக்கள் இருவர் உடலிலும் பற்றிய தீயை அணைத்தனர். இருவரும் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சந்தோஷ் ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸார் அனுசுயா மற்றும் சந்தோஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.