பெண்ணிடம் சில்மிஷம் - தட்டிக் கேட்டவர்கள் வேட்டியை உருவிய வாலிபர்
குலசேகரம்: பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை பஸ்சில் இருந்தவர்கள், தட்டிக் கேட்டு சத்தம் போட்டதால் அவர் அவர்களின் வேஷ்டியை உருவினார். இதனால் பயணிகள் பயத்தில் அலறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிக அளவு இருந்தது. இதனால் பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.
இந்த கூட்டத்தில் டிப்டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் பெண்கள் பகுதியில் வசதியாக நின்று கொண்டார். டிரைவர் பிரேக் போடும் போதெல்லாம் ஒரு பெண்ணின் மேல் விழுவது போல் மோதி தொல்லை கொடுத்தார். இது மற்ற பயணிகளுக்கு எரிச்சலை கொடுத்தது.
இதை ஆரம்பம் முதலே கவனித்து வந்த பயணி ஒருவர் அந்த ஆசாமியை சத்தம் போட்டார். இதனால் அந்த ஆசாமி பின்னால் நின்று கொண்டார். பின்னர் திடீரென தன்னைக் கண்டித்த பயணியை மோசமான வார்த்தைகளால் திட்ட தொடங்கினார். இதை மற்ற பயணிகள் தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பஸ் திருவட்டார் பஸ் நிலையத்தை அடைந்த போது தன்னை கண்டித்தவர்களின் வேட்டியை திடீரென உருவி கொண்டு டிப்டாப் ஆசாமி கீழே இறங்கினார். அதனை தடுக்க வந்த மற்றொரு பயணியின் வேட்டியையும் அவர் உருவினார். வேட்டியை பறி கொடுத்தவர்கள் அரை நிர்வணத்தோடு சீட்டுக்குள் பதுங்கி கொண்டனர். இதனால் பெண்களுக்கு தர்ம சங்கடமாகி போனது.
இப்படி நடந்து கொண்ட அந்த ஆசாமி கேசவபுரத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் பெண்கள் சிலர் வேறு பஸ்சில் பயணத்தை தொடர்ந்தனர். அந்த ஆசாமி வேஷ்டியை திரும்ப கொடுக்காமல் அவர் பாட்டுக்கு அவர் வழியில் சென்று விட்டார்.
இந்த சம்பவத்தால் திருவட்டார் பஸ் நிலையத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக இருந்தது. இந்த சம்பவம் பெண்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.