இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.. சகாயம் ஐ.ஏ.எஸ். அழைப்பு
தஞ்சாவூர்: இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சகாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதில் வீணாக கூடிய இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த சமூகத்தை நேசிக்க கூடிய தலைவர்களை கொண்டுவர இளைஞர்களால் மட்டும் தான் முடியும். என்னைப் பொறுத்தவரை இளைஞர்கள் பெருமளவிற்கு அரசியலுக்கு வர வேண்டும். தலைமை பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மணல் உள்ளிட்ட இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும். அரசு அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். கிரானைட் முறைகேடு குறித்து எனது மனசாட்சிபடி விசாரணை செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்திலும், அரசுக்கும் அளித்து விட்டேன். இது குறித்து இனி நீதிமன்றம், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சகாயம் கூறினார்.