மறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி!
இளைஞர்கள் சிவகங்கை குயிலியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
சென்னை: வரலாறுதான் எவ்வளவு விந்தையானது - இன்று கொடியேற்றி மிட்டாய் கொடுத்து, ஆடல் பாடலும் சுதந்திர தினத்தை அனுபவிக்கிறோம். இந்த சுதந்திரத்தை பெறுவதற்குத்தான் எவ்வளவு பேர் தங்கள் உயிரை கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் வருடா வருடத்திற்கு ஒரு சிலரின் பெயர்களே முன்னுதாரணங்களாகவும், மதிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் முகம், பெயர், தெரியாதவர்கள் எவ்வளவோ பேர் இருட்டடிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா?
வரலாற்றை தோண்டி எடுத்தால் அதில் நிறைய தமிழர்கள்தான் இருப்பார்கள். அதிலும் வீரம் நிறைந்த தமிழச்சிகள்தான் அதிகமாக இருப்பார்கள். அப்படி மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை சுருக்கம்தான் இது.
நாச்சியார்-போராளி
எல்லோருக்கும் வேலுநாச்சியாரை தெரிந்திருக்கும். பிறவி போராளி. திறமைசாலி. அறிவாளி. வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்த சிவகங்கையிலும் காலடி வைத்தனர். அந்த முற்றுகை போரில் நாச்சியாரின் கணவனையும், மகளையும் கொன்றார்கள். பிறகு நாச்சியரையும் கொல்ல ஆங்கிலேயர்கள் துடித்து தேடினார்கள். கிடைக்கவேயில்லை.
நாச்சியார் எங்கே?
வழியில் வந்த உடையாள் என்ற பெண்ணிடம் நாச்சியார் எங்கே என கேட்க, அவளோ காட்டிக்கொடுக்க மறுக்க, அவரை ஒரே வெட்டில் வெட்டி கொன்றார்கள். உடையாளை இப்போது யாருக்காவது தெரியுமா? ஏற்கனவே குடும்பத்தை கொன்றார்கள், இப்போது உடையாளையும் கொன்றுவிட்டார்களே என்று எண்ணி நாச்சியார் சூளுரைத்தார். பல வழிகளையும், முறைகளையும் செயல்படுத்தினார்.
கோயிலுக்குள் நுழைந்தனர்
அதில் எதிர்பாராத ஒரு தாக்குதலையும் திட்டமிட்டார். அதன்படி வெள்ளையர்களை அழிக்க மருது சகோதரர்களின் துணையுடன் அனைத்து படைகளையும் தானே திரட்டினார். தன் தலைமையிலேயே சிவகங்கையை அரண்மனைக்குள் நுழைந்தார். அந்த அரண்மனைக்குள் ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பெண்கள் வந்து சாமி கும்பிடுவார்கள். கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு நுழையும் பெண்களுடன் வேலு நாச்சியாரும் அவரோடு இருந்த பெண்களும் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்தனர். கூடவே பயங்கரமான ஆயுதங்களையும் தங்கள் உடைக்குள் மறைத்து கொண்டனர்.
கிடங்கில் குதித்தார்
அப்போது எதிர்பாராத நேரத்தில் நாச்சியார் தாக்குதலில் இறங்கினார். எதிரிகளால் நாச்சியாரை சமாளிக்க முடியவில்லை. இப்போதுதான் நாச்சியாரின் அடுத்தகட்ட திட்டம் செயல்பட தயாரானது. இந்த திட்டத்தின்படி வெள்ளையர்களை வீழ்த்த தயாராவது யார் தெரியுமா? ஒரு பெண். என்ன செய்தார் தெரியுமா? தன் உடல் முழுவதும் விளக்குக்கு ஊற்றும் எண்ணெயை பூசிக் கொண்டார். 'வீரவேல் வெற்றிவேல்' என்று உரக்க சத்தமிட்டார். பீறிட்டு எழுந்த குரல் கேட்டு வெள்ளையர்கள் மிரண்டனர். முழுவதுமாக எண்ணெய் பூசிய தன் உடலில் தீ வைத்து கொண்டார். பின்னர் ஓடிபோய் வெள்ளையரின் ஆயுதக் கிடங்கினுள் குதித்தார்.
சாம்பலான ஆயுதக்கிடங்கு
ஒட்டுமொத்த ஆயுதங்களும் வைத்திருந்த அந்த கிடங்கானது வெடித்து சிதறியது. தன்னையும் எரித்து கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்களையும் எரித்து சாம்பலாக்கினார் அந்த பெண். அவர் பெயர்தான் குயிலி. இவர்தான் உலகிலேயே முதன்முதலாக மனித வெடிகுண்டாக செயல்பட்டவர். அப்படி குயிலியை அந்த ஆயுத குவியலை எரித்து சாம்பலாக்காமல் இருந்தால், வீரநாச்சியார் கிடைத்திருக்க மாட்டார். சிவகங்கையையும் நாச்சியாரால் மீட்டிருக்க முடியாது. நாச்சியாரின் மிக மிக நம்பிக்கைக்குரிய உளவாளியாக இருந்தார் இவர். பலமுறை நாச்சியாரை கொல்ல முயற்சித்தபோதெல்லாம் குயிலி அவரை காப்பாற்றி இருக்கிறார். இந்த குயிலியை பற்றி யார் பேசுகிறார்கள் இப்போது?
வரலாற்று பிழை
திரிக்கப்பட்டு, மறைக்கப்பட்ட, இருட்டடிக்கப்பட்ட வரலாற்றில் உடையாள் என்னும் பெண்ணை யார் நினைப்பார்கள்? குயிலியை மட்டும் தான் யார் நினைத்து பார்ப்பார்கள். வேலு நாச்சியாரையே மறந்துவிட்ட வரலாறு அவருக்கு உயிராகவும், மானமாகவும், பக்கபலமாகவும் தோள்கொடுத்த குயிலியை மட்டும் நினைத்து விட போகிறதா என்ன? சுதந்திரத்திற்காக உயிரை நீத்த இந்த மறத்தமிழச்சிகள் பற்றி பாடத்திட்டங்களிலேயே எப்போதோ வகுத்திருக்க வேண்டும்தானே? இது யார் செய்த பிழையோ தெரியாது... ஆனால் குயிலியை மறந்தது ஒரு வரலாற்று பிழையே!