தங்கதமிழ்செல்வனின் மைத்துனர் மருமகள் தற்கொலை.. நிலக்கோட்டையில் பரபரப்பு.. சாலை மறியல்
நிலக்கோட்டையில் திருமணமான 2 வருடத்தில் இளம் பெண் தூக்கில் தொங்கினார்
Recommended Video
நிலக்கோட்டை: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் மரணம் தொடர்பாக டிடிவி தினகரன் அணி கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி காலனியைச் சேர்ந்தவர் விவேக்பாண்டி. இவர் தினகரன் அணி கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வனின் மைத்துனர் மகன் ஆவார்.
விவேக் பாண்டிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சபிதாவுக்கும் இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு விவேக்பாண்டி துன்புறுத்தியதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சபிதா வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு, துப்பாட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து நேற்றிரவு விரைந்து வந்த தங்கதமிழ்ச்செல்வன் சபிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று சபிதா உறவினர்கள் விவேக்பாண்டி சபிதாவை கொலை செய்து தூக்கில் மாட்டியதாகவும், சபிதாவின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கூறி சாலை மறியல் செய்தனர்.
நிலக்கோட்டை டி.எஸ்.பி சமரசம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் தங்க தமிழ்ச்செல்வன் தனது செல்வாக்கை பயன்படுத்தி விவேக் பாண்டியின் குற்றத்தை மறைப்பதாக அப்போது அவர்கள் குற்றஞ்சாட்டினர்.