பல பெண்களுடன் தொடர்பு... கணவரின் தவறான நடத்தையால் இளம்பெண் தற்கொலை
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கணவரின் தவறான நடத்தையால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜாராம் என்பவரது மகள் ராஜசுதா (24). இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜபிரபாகரன் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ராஜபிரபாகரன், திருமணத்திற்கு பின்னர் மனைவியுடன் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருமணமான சில நாட்களிலேயே பிரபாகரனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை ராஜசுதா கண்டுபிடித்தார்.
அதனை தட்டிக்கேட்டபோது கூடுதல் வரதட்சணை கேட்டு, ராஜசுதாவை ராஜபிரபாகரன் சித்ரவதை செய்துள்ளார். இதனால் கணவரிடமிருந்து பிரிந்து கடந்த 19ம் தேதி தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார் ராஜசுதா.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தொடர்ந்து சோகமாக இருந்து வந்த ராஜசுதா, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, ராஜசுதாவின் தாய் ராஜலட்சுமி, கீழராஜ குலராமன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், ‘ராஜபிரபாகரனுக்கு அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரான பெண் காவலர் மற்றும் சுகன்யா உள்ளிட்ட பெண்களுடன் பழக்கம் இருந்ததாகவும் அவர்களது பேச்சை ராஜசுதா செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளின் தற்கொலைக்கு ராஜபிரபாகரனின் பெற்றோரும் காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.